மே தின வாழ்த்து! வைகோ
Issues: Environment, Labour
Region: Tamil Nadu, Other States
Category: Articles, Event
மே தின வாழ்த்து!
வைகோ
‘தொழிலாளர்களின் உழைப்பே உலகத்தின் மூலதனம்’ என்ற உண்மையை, பாட்டாளி வர்க்கம் ரத்தம் சிந்திப் பிரகடனம் செய்த நாள்தான் மே முதல் நாள் ஆகும்.
1806 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் ஃபிலடெல்பியாவில் ஒன்றுதிரண்டு உரிமைக் கொடி உயர்த்தினார்கள். 1866 இல், அமெரிக்காவில் தேசிய தொழிற்சங்கம், எட்டு மணி நேரம்தான் வேலை என அறிவித்தது.
1884 சிகாகோவில் கூடிய மாநாடுதான் 1886 மே 1 முதல், எட்டு மணி நேர வேலையை உலகெங்கும் ஏற்படுத்த வேண்டும் என்பதை முன்வைத்தது.
1886 ஆம் ஆண்டு மே 3 ஆம் நாள் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள் மீது காவல்துறை நடத்திய கொடிய அடக்குமுறையை எதிர்த்து, மே 4 ஆம் நாள், வைக்கோல்சந்தை சதுக்கம் என்ற இடத்தில், தொழிலாளர்கள் அமைதியாக நடத்திய ஆர்ப்பாட்டத்தில், காவல்துறை காட்டுமிராண்டித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டதில், தொழிலாளர்கள் பலர் படுகாயம் அடைந்தனர், நான்கு பேர் கொல்லப்பட்டனர். இதில் கைது செய்யப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் நான்கு பேர் 87 நவம்பர் 11 இல் தூக்கில் இடப்பட்டனர்.
1888 இல், செயிண்ட் லுhயிசில் கூடிய, அமெரிக்கத் தொழிலாளர்கள் கூட்டு அமைப்பு, மே முதல் நாளை, தொழிலாளர்கள் உரிமை தினமாக, உலகெங்கும் கொண்டாடத் தேர்ந்து எடுத்தது. அதற்கு அடுத்த ஆண்டே, எங்கெல்ஸ் அதை வரவேற்றார்.
1889 ஜூலை 14 இல், பிரெஞ்சுப் புரட்சியின் 100 ஆவது ஆண்டு விழாவை, இரண்டாவது அகிலத்தின் மாநாடாக, பாரிஸ் பட்டணத்தில் கூட்டி, மே முதல் நாளே, பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கை நாள் என அறிவிக்கப்பட்டது.
அன்றுமுதல் இன்றுவரை 122 ஆண்டுகளாக மே நாள் கொண்டாடப்படுகிறது. 1896 ஆம் ஆண்டு, மாமேதை லெனின், சிறையில் இருந்தவாறு, மே முதல் நாளை, ஒரு போராட்ட தினமாக தொழிலாளர்கள் அறியச் செய்து, ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிட்டார்.
மனிதகுல வரலாற்றில் தொழிலாளர்கள் தங்கள் வேலை உரிமைகளுக்காக மட்டும் போராடவில்லை. அடக்குமுறையை எதிர்த்தும், சர்வாதிகாரத்தை எதிர்த்தும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இரத்தம் சிந்தினார்கள், போராடினார்கள்.
ரஷ்யப் புரட்சியும், சீனப்புரட்சியும், கியூபா விடுதலையும், வியட்நாம் விடுதலையும், தொழிலாளர்கள் ஆயுதம் ஏந்தியும், உயிர்த்தியாகம் செய்தும் வெற்றியை ஈட்டித் தந்த புரட்சிகள் ஆகும்.
இப்போது நம் கண்ணெதிரே இலங்கைத் தீவில், கொடியவன் இராஜபக்சேயின் சிங்கள இனவாத அரசு, ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்து, கற்பனைக்கு எட்டாத மனிதப் பேரழிவை நடத்தி விட்டது. இக்கோரக் கொலைகளை நடத்திய இராஜபக்சே, உண்மையை வெளிக்கொணர்ந்து ஐ.நா. மன்றத்துக்கு அளிக்கப்பட்ட அறிக்கையை எதிர்த்து, சிங்களக் காடையர்ளை, மே 1 ஆம் நாள் கொழும்பில் திரட்டுகிறான். அவனது மண்டைக் கொழுப்புக்கும், மாபாதகத்துக்கும் மரண அடி கொடுக்க அனைத்து நாடுகளின் மனசாட்சியைத்
தட்டி எழுப்ப, கொடியோனைக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க, மனித உரிமை உணர்வுடையோர் அனைவரையும், மே தினம் அறைகூவி அழைக்கிறது.
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தோனுக்கு சங்காரம் நிசமெனத் தாய்த் தமிழகத்துப் பாட்டாளி வர்க்கமும்,இளையோர் கூட்டமும் சூளுரைக்கட்டும்!
தாயகம், வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
30.04.2011 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

