மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் இன்று (20.04.2012 வெள்ளிக்கிழமை) காலை கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில்,
Issues: Environment, Healthcare, Human Rights, Labour, Law & Order, Politics, Poverty
Region: Chennai - North, Chennai - South, Coimbatore - Urban, Coimbatore - Rural, Cuddalore, Dharmapuri, Dindigul, Erode, Kancheepuram, Kanyakumari, Karaikal, Karur, Krishnagiri, Madurai - Urban, Madurai - Rural, Nagapattinam, Nammakal, Nilgris, Perambalur, Pudhukottai, Puducherry, Ramanathapuram, Salem, Sivagangai, Tanjore, Theni, Thiruvallore, Thiruvannamalai, Thiruvarur, Tirunelveli - Urban, Tirunelveli - Rural, Tiruppur, Trichy - Urban, Trichy - Rural, Tuticorin, Vellore - East, Vellore - West, Viluppuram, Viruthunagar, Tamil Nadu
Category: Articles, Event, Headlines, Vaiko Answers, Press Releases
உயர்நிலைக்குழு - மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் இன்று (20.04.2012 வெள்ளிக்கிழமை) காலை கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில், சென்னை, தாயகத்தில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் எண். 1
திராவிட இயக்க நூற்றாண்டு விழா - பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு செப்டம்பர் 15 கரூர் நகரில் சிறப்பாக நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் எண். 2
நூற்றாண்டு விழா காணும் போற்றுதலுக்குரிய தமிழறிஞர் டாக்டர் மு. வரதராசன் (மு.வ.) அவர்களின் இலக்கியப் படைப்புகளை பள்ளிக்கல்வி கல்லூரி கல்வி பாடங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண். 3
தமிழ் இலக்கியத்திற்குத் தனது தன்னிகரற்ற தொண்டால் பெருமை சேர்த்த தமிழறிஞர் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசன் (மு.வ.) அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது நினைவைப் போற்றும் வகையில் மத்திய அரசு தபால் தலை வெளியிட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண். 4
தமிழகத்தில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 17 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் கடந்த பல ஆண்டுகளாகத் தங்களுக்கு அரசு ஊழியர்களின் ஊதியத்திற்கு இணையான ஊதியம் வழங்க வேண்டுமெனப் போராடி வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் இன்றைய ஆளும் கட்சிக்கு ஆதரவான தொழிற்சங்கமும் இக்கோரிக்கையினை வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து போராடி வந்தது.
இன்று அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் இக்கோரிக்கை ஏற்கப்படாத காரணத்தால் கடந்த 17 நாட்களாகப் போராடி வரும் சர்க்கரை ஆலைத் தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமூகமான உடன்பாடு ஏற்படுத்தித் தர முன்வருமாறு தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண். 5
தமிழகத்தின் ஆற்று நீர் உரிமையை அண்டை மாநிலங்கள் தடுத்து வருவதும் வஞ்சிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
தமிழகத்தின் கிருஷ்ணகிரி. தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய ஐந்து மாவட்ட விவசாய மக்களின் வாழ்வாதாரமாகவும் குடிநீர் ஆதாரமாகவும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கெலவரப்பள்ளி அணை, கே.ஆர். அணை, பாம்பாறு அணை, சாத்தனூர் அணை ஆகியவை விளங்கி வருகின்றன.
இந்த அணைக்கட்டுகளுக்கு வரும் நீராதாரத்தை முற்றிலும் தடுத்து ஐந்து மாவட்டங்களைப் பாலைவனமாக்கிடும் வகையில் கர்நாடக மாநில அரசு தமிழகத்தின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள தங்கள் மாநிலப் பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட திட்டமிட்டுள்ளது.
அதேபோல், காவிரி ஆற்றில் தமிழகத்தின் நீர் உரிமையைப் பறிக்கும் வகையில் மேகதூது அணையைக் கட்ட கர்நாடக அரசு தீர்மானித்துள்ளது.
தமிழக விவசாயிகளின் வாழ்வைச் சீர்குலைத்து தமிழகத்தின் ஜீவாதார உரிமைக்குக் கேடு விளைவிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும் தமிழக அரசு விழிப்பாக இருந்து கர்நாடக அரசு அணைகள் கட்டுவதைத் தடுத்து நிறுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் 2012 ஏப்ரல் 30 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் கிருஷ்ணகிரி நகரில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் எண். 6
மாணவர்கள் தற்கொலைக்குத் தீர்வு காண்க!
பெற்று வளர்த்து கல்வி புகட்டி சான்றோனாக்கப் பாடுபடும் பெற்றோரைப் பெருந்துன்பத்துக்கு ஆளாக்கும் வகையில் கல்லூரி மாணவச் செல்வங்களின் தற்கொலைச் சாவுகள் அதிகரித்து இருப்பது பெரும் கவலை அளிப்பதாக உள்ளது. மாணவர்கள் உளவியல் ரீதியாகப் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி மன அழுத்தத்தினாலும், வெளியே சொல்ல முடியாத தன்மையாலும் தற்கொலை முடிவுக்கு வருகின்றனர். இத்தற்கொலைச் சாவுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாணவர்களுக்கு எதையும் தாங்கி வளரும் மன உறுதியையும், தன்னம்பிக்கை சிந்தனையையும் இளம் வயதிலிருந்தே பயிற்றுவிப்பது ஓர் இன்றியமையாத கடமையாகக் கருதிட வேண்டும்.
எனவே, ஒன்பதாம் வகுப்பு உயர்நிலைக் கல்விப் பாடத் திட்டத்தில் தொடங்கி கலை, அறிவியல் பட்டப்படிப்பு. பொறியியல், மருத்துவம், சட்டப்படிப்பு வரை தகுதி வாய்ந்த மனோதத்துவ நிபுணர்கள், வாழ்வில் வெற்றி பெற்ற தன்னம்பிக்கையாளர்களைப் பயிற்றுநர்களாகக் கொண்ட பயிற்சி வகுப்புகளைப் பாடத் திட்டத்தில் ஓர் அங்கமாகச் சேர்த்து நடத்திட தமிழக அரசு முன்வர வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
‘தாயகம்’ தலைமைக் கழகம்
சென்னை - 8 மறுமலர்ச்சி தி.மு.க.
20.04.2012

