மத்திய பட்ஜெட்: விலை ஏற்றத்தைத் தடுக்க, திட்டவட்டமான அறிவிப்புகள் இல்லை! வைகோ அறிக்கை
Issues: Economy, National
Region: Tamil Nadu
Category: Headlines, Press Releases
மத்திய பட்ஜெட்: விலை ஏற்றத்தைத் தடுக்க, திட்டவட்டமான அறிவிப்புகள் இல்லை!
வைகோ அறிக்கை
விலைவாசி தாறுமாறாக ஏறி அனைத்துத் தரப்பு மக்களும் தத்தளிக்கும் நிலையில், விலை ஏற்றத்தைத் தடுக்க திட்டவட்டமான அறிவிப்பு எதுவும் பட்ஜெட்டில் இல்லை. ஊக வணிகம், இணையதள வணிகம் மற்றும் சேவை வரி ஆகியவற்றை இரத்து செய்யாமல், பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி உயர்வினால், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து மேலும் விலைவாசி உயரவே வழிவகுக்கும்.
வேளாண்மைத்துறை வளர்ச்சிக்குத் தேவையான ஊக்குவிப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. 4 சதவீத குறைந்த வட்டியில் வேளாண் கடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காமல், உரிய காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தினால் மட்டுமே 2 சதவீத வட்டிச் சலுகை என்ற அறிவிப்பு விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. உர விலை உயர்வு தள்ளிப் போடப்பட்டு இருக்கிறதே ஒழிய ரத்து செய்யப்படவில்லை.
வேளாண்துறைக்கு அடுத்தபடியாக பெரும்பான்மையான மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் சில்லரை விற்பனையில் தாராளமயத்தை அனுமதிப்பது, கோடிக்கணக்கான சில்லரை வணிகர்களையும் அதை நம்பி உள்ள தொழிலாளர்களையும் கடுமையாகப் பாதிக்கும்.
தொழிற்சாலைகளுக்குப் பொருளாதார ஊக்குவிப்புகள் தொடரும் என்று அறிவித்து உள்ள நிதி அமைச்சர், இந்தியாவின் வளர்ச்சிக்குப் பெரும் பங்கு ஆற்றிய பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்பனை செய்யப்படும் என்று வெளியிட்டு உள்ள அறிவிப்பு, லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கும் முயற்சியே ஆகும்.
வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டங்களோ, தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு திட்டங்களோ ஒன்றும் இல்லை.
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை.
திருப்பூர் ஜவுளித்துறை வளர்ச்சிக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது, வரவேற்கத்தக்கது.
அமைப்புசாரா தொழிலாளர் நலன் திட்டங்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு மற்றும் காப்பீடு, மரபுசாரா எரிசக்தித் துறைக்கு ஊக்குவிப்பு, உணவு பாதுகாப்புச் சட்டம் போன்ற ஒருசிலவற்றைத் தவிர மத்திய அரசின் பட்ஜெட்டில், மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் வரவேற்கத்தக்க அம்சங்கள் இல்லை.

