வைகோ மீலாது வாழ்த்து
Issues: International, National
Region: Tamil Nadu
Category: Headlines, Press Releases
வைகோ மீலாது வாழ்த்து
“அகிலத்தோர்க்கு அழகிய முன்மாதிரி” என்று திருக்குர்ஆனில் அருளப் பெற்ற அண்ணல் எம்பெருமானார் (ஷல்) அவர்கள் பிறந்த நன்னாள் - பொன்னாள் என்று இந்நாளில் புவியெங்கும் போற்றிக் கொண்டாடப்படுகிறது. உத்தம நபியின் உதய தினம் என்பது இத்தரை மீதினில் சத்தியநெறி நிற்கும் சான்றோர் அனைவருக்கும் உள்ளத்தில் உவகையையும், இலட்சியப் பயணத்தில் உறுதியையும் தரும் ஒப்பற்ற சிறப்புடையதாகும்.
தனி மனித வாழ்விலும், பொது வாழ்விலும் ஒழுக்கத்தையும் நேர்மையையும் கடைபிடித்தவர் - தூயவர். ஒரு கையில் சூரியனையும், மறு கையில் சந்திரனையும் தருவதாக இருந்தாலும் இலட்சியத்தில் - நம்பிக்கையில் ஈமானில் சமரசம் செய்து கொள்ளாத சரித்திர நாயகர் அவர். மாட மாளிகைகள் - ஆடம்பரங்கள் - ஆரவாரங்கள் - படாடோப வாழ்க்கை -- இவற்றை அலட்சியமாக ஒதுக்கித் தள்ளி எளிய வாழ்வு - இலட்சிய வாழ்வு வாழ்ந்த பெருமானாரின் வாழ்க்கை மலர்ப் பாதை அல்ல; கல்லும், முள்ளும், கடும் எதிர்ப்பும், இடையூறும் மிகுந்து இருந்த போதிலும் அவற்றை அன்பால் - அறவழியால் எதிர்கொண்டார். போர்முனைக்கு வர நேர்ந்தபோதும் நேர்மையுடன் அதனை எதிர்கொண்டு பெரும் வெற்றிகள் குவித்தார்.
சமூக ஒற்றுமைக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் சற்றும் பங்கம் வராமல் பகைவரும் போற்றும் பண்புடன் மத நல்லிணக்கத்திற்கு வழிவகுத்து மனிதநேய மாண்பு காத்த மா நபி (ஷல்) பிறந்த நாளில் மன்பதை எங்கும் அமைதியும், சமாதானமும் தழைக்கவும், தமிழ் மண்ணில் சமய நல்லிணக்கம் நிலைக்கவும் உழைக்க உறுதிகொள்வோம் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இÞலாமியப் பெருமக்களை வாழ்த்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

