பொய்வழக்குப் போட்ட காவல்துறைக்கு வைகோ கண்டனம்
Issues: Human Rights, Politics
Region: Kancheepuram, Tamil Nadu
Category: Headlines, Press Releases
பொய்வழக்குப் போட்ட காவல்துறைக்கு
வைகோ கண்டனம்
காஞ்சிபுரம் மாவட்டம் - ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய மறுமலர்ச்சி தி.மு.கழகச் செயலாளர் ஜெகன் தனசேகரன் அவர்களது துணைவியார் திருமதி மாலா தனசேகரன் வல்லக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்று சிறப்பான மக்கள் நலப்பணி ஆற்றி வருகிறார். இதை ஜீரணித்துக் கொள்ளமுடியாமல் அதே ஊராட்சியைச் சேர்ந்த அவரது அரசியல் எதிரிகள் அவதூறாக பேசியும் அவமரியாதை செய்தும் பெண் என்றும் பாராமல் நாகரிகமற்ற முறையில் நடந்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த 4.2.2010 அன்று ஊராட்சி மன்றத்தின் அனுமதி இல்லாமல் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலைகளை ஜே சி பி இயந்திரம் மூலமாக பள்ளம் தோண்டி திருட்டுத்தனமாக குடிநீர் இணைப்பைக் கொடுக்க முயற்சி செய்துள்ளார் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவராக இருந்த காங்கிரÞ கட்சியைச் சேர்ந்த அன்பு என்பவர்.
இச்செய்தி அறிந்து ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஒன்றியச் செயலாளர், மக்கள் நலப் பணியாளரும் தி.மு.க. கிளைச் செயலாளருமான குமார் மற்றும் ஊராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோர் சென்று தவறை சுட்டிக்காட்டி முறையாக அனுமதிபெற்று பணியைச் செய்துகொள்ள அறிவுறுத்தியபோது அவதூறாகப் பேசி அன்பு தகராறு செய்துள்ளார். இதைக் காவல்துறைக்கு தொடர்புகொண்டு ஊராட்சி மன்றத் தலைவர் தெரிவித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
நடந்தவற்றை புகார் மனுவாகத் தயாரித்து 5.2.2010 அன்று ஒரகடம் உ5 காவல் நிலையத்தில் புகாரைக் கொடுத்தும் மேல்முறையீட்டுக்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பியும் நடவடிக்கைக்காக காத்திருந்தனர். இந்நிலையில் தன்மீது புகார் கொடுத்ததை கேள்விப்பட்ட அன்பு வெளியூர்களில் இருந்து அடியாட்களை அழைத்து வந்து இன்று காலை வலியச் சென்று தகராறு செய்து கத்தி மற்றும் தடி உள்ளிட்ட ஆயுதங்களாலும், கற்களாலும் தாக்குதல் நடத்தி உள்ளார். கலவரம் நடைபெறுவதை உடனடியாக காவல்துறைக்கு தொலைபேசிமூலம் தகவல் தெரிவித்தும் காவல்துறை வந்ததற்குப் பின்பும் காவல்துறையினர் முன்பாகவே கற்களை வீசி கலவரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதைக் கண்டித்து ஊர் பொதுமக்களும், பெண்களும் வெளியில் இருந்து அடியாட்களை அழைத்துக் கொண்டுவந்து கலவரம் செய்வதைக் கண்டித்தும் நடவடிக்கை எடுக்கக்கோரியும், கலவரத்தில் ஈடுபட்ட அடியாட்களை கைதுசெய்ய வலியுறுத்தியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்தச் சரகத்தின் காவல்துறை கண்காணிப்பாளர்களான டி.எஸ்.பி. மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து நடவடிக்கை எடுப்பதாக சொன்னதன்பேரில் சாலைமறியலை விடுத்துக் கொண்டனர்.
இருப்பினும் ஒரக்கடம் காவல்துறை ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் ம.தி.மு.க. ஒன்றியக் கழகச் செயலாளர் தனசேகரன் அவர்களையும், தி.மு.க. கிளைச் செயலாளர் குமார் அவர்களையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று, அவர்கள்மீது பொய்யான வழக்குகளை குற்ற எண் 33/ 2010 - 147, 149, 323, 294b, 341, 506/ii ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து வேலூர் சிறையில் இன்று மாலை அடைத்து உள்ளனர். இதில் சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல்துறையினர் ஊராட்சி மன்றத் தலைவரின் புகார் மனு மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இச்சம்பவம் நடந்திராமல் தடுத்திருக்க முடியும். மாறாக காவல்துறையின் மெளனம் எதிரிகளின் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துவதாக அமைந்து விரும்பத்தகாத சம்பவம் நடந்து உள்ளது.
எனவே, மறுமலர்ச்சி தி.மு.க. ஒன்றியச் செயலாளர் மீது போடப்பட்ட பொய்வழக்கு தள்ளுபடி செய்ய வேண்டும். பொய்வழக்குப் போட்ட காவல் துறைக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, தவறுசெய்த காவல்துறையினர்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவும் வேண்டும்.