யானைமலை: இயற்கையே வடித்த சிற்பத்தை, உடைத்து நொறுக்குவதா? மறுமலர்ச்சி தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!
Issues: Environment, Rural
Region: Madurai - Rural, Tamil Nadu
Category: Headlines, Press Releases
யானைமலை: இயற்கையே வடித்த சிற்பத்தை, உடைத்து நொறுக்குவதா? மறுமலர்ச்சி தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!
மதுரை மேலூர் சாலையை அடுத்து அமைந்து உள்ள யானைமலையை, சிற்பக்கலை நகரமாக ஆக்குவதற்கு முடிவெடுத்து, தமிழக அரசு, அதற்காக ஆய்வு மேற்கொள்ள, முதல்நிலை ஆய்வுக்குழுவை அமைத்து இருக்கிறது.
யானை கால்களை மடித்து உட்கார்ந்து இருப்பதைப் போன்ற, கம்பீரமான தோற்றத்துடன் காட்சி அளிக்கும் யானைமலை இயற்கையின் அருட்கொடை. இலட்சக்கணக்கான மக்களின் வழிபடும் இடமாகவும் திகழ்கிறது. சைவ, வைணவ மதங்களைச் சார்ந்தோர், தலபுராணங்கள் இடம்பெற்று உள்ள இந்த யானைமலையை, புனிதத்தலமாக எண்ணி, பெருத்த நம்பிக்கை வைத்து உள்ளனர்.
இத்தகைய மலையை உடைத்து, சிவப்புக் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து விற்று, பல்லாயிரம் கோடி பணத்தைக் குவிக்கத் திட்டமிடுவதாகவும், அதில் பெரும்பணம், அரசின் கருவூலத்துக்கு வரப்போவது இல்லை என்றும், பலத்த சந்தேகமும், குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது. ஏற்கனவே, தமிழகத்தின் நதிகள், ஆற்றுப்படுகைகளில் மணல் சுரண்டப்பட்டு, இயற்கை அளித்த வளங்கள் அழிக்கப்பட்டு, அதிகாரவர்க்கத்தின் ஊழல் கொள்ளைக்கு ஊற்றுக்கண் ஆகி விட்டது.
இயற்கையே வடித்த சிற்பமாம் யானைமலையைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி, சிற்ப நகரம் அமைக்கப்போகிறோம் என்ற வாதத்தை ஏற்கவே முடியாது. இதுகுறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், ‘அரசு இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும், ஆய்வுக்குத்தான் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது’ என்றும் கூறி இருக்கிறார்.
ஆய்வு செய்வதே தவறானது. யானைமலையின் சிவப்புக் கிரானைட் கற்களை வெட்டி, ஒருசிலர் பகல் கொள்ளை அடிப்பதற்குத்தான் இந்தத் திட்டத்தை வகுக்கிறார்கள்.
இந்த முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டது, வன்மையான கண்டனத்துக்கு உரியது ஆகும். அந்த மலையைச் சுற்றிலும் வசிக்கின்ற இலட்சக்கணக்கான மக்கள், அறவழியில் போராடுவதற்கும், காவல்துறை அனுமதி மறுக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தொடர் உண்ணாநிலை அறப்போர் நடத்தவும், காவல்துறை அனுமதிக்கவில்லை. அதற்கும் மேலாக, யானைமலையின் அடிவாரத்தில், பல ஆண்டுகளாக வசிக்கின்ற எழை எளிய மக்கள், அவர்கள் வசிக்கின்ற இடங்களைக் காலி செய்ய வேண்டும் என்று, அதிகாரிகள் மிரட்டுகிறார்கள்.
யானைமலையைச் சிதைக்க முற்படும் தமிழக அரசின் போக்கைக் கண்டித்தும், அந்தத் திட்டத்தை நிரந்தரமாகக் கைவிடுவதாக அறிவிக்கக் கோரியும், மார்ச் 4 ஆம் நாள், வியாழக்கிழமை அன்று
காலை பத்து மணி அளவில், ஒத்தக்கடையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், என்னுடைய தலைமையில், கண்டன ஆர்ப்பாட்ட அறப்போர் நடைபெறும்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை-8
21.02.2010

