சங்கரன்கோவில் விசைத்தறியாளர் போராட்டம் சுமூகத் தீர்வு காண வேண்டும்! வைகோ அறிக்கை
Issues: Environment, Human Rights, Poverty, Rural
Region: Tirunelveli - Urban, Tirunelveli - Rural
Category: Articles, Headlines, Announcements
சங்கரன்கோவில் விசைத்தறியாளர் போராட்டம்
சுமூகத் தீர்வு காண வேண்டும்!
வைகோ அறிக்கை
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் நகரம் நெசவுத் தொழிலுக்குப் புகழ்பெற்ற நகரமாகும். இங்கு 1973 முதல் இயங்கி வரும் விசைத்தறித் தொழிலில் சுமார் 15 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அங்கம் வகிக்கும் சிறு விசைத்தறி துணி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி கடந்த டிசம்பர் 26 முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சங்கரன்கோவில் விசைத்தறிக் கூடங்களில் உற்பத்தி செய்யப்படும் துணிரகங்கள் அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு சுமார் இரண்டு கோடி மதிப்பிலான துணி உற்பத்தி இழப்பும், பதினைந்தாயிரம் பேருக்கு வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே முன்னறிவிப்பின்றி தினமும் நான்கு, ஐந்து முறை ஏற்படும் மின்சார தடையால் பாதிப்புக்கு உள்ளாகி வரும் விசைத்தறித் தொழில், தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தால் பெரும் உற்பத்தி இழப்பிற்கும், வருவாய் இழப்பிற்கும் உள்ளாகி உள்ளது கவலை அளிக்கிறது.
சிறு விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வுப் போராட்டம் ஒரு தொடர்கதையாகவே நடந்து வருகிறது. புளியங்குடி, சிந்தாமணி பகுதி விசைத்தறி நெசவாளர்களும் போராடி வருகின்றனர். மேலும் காலதாமதம் செய்யாமல் இப்பிரிவினர்களின் நியாயமான கூலி உயர்வுக் கோரிக்கையினை நிறைவேற்றிடவும், நகரில் தொழில் அமைதி நிலவிடவும் போராடிவரும் அமைப்பினர் மற்றும் மாஸ்டர் வீவர்ஸ், அசோசியேசன் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி சுமூகத் தீர்வு காண விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
13.01.2012 மறுமலர்ச்சி தி.மு.க

