சிவந்தனுக்கு வாழ்த்துகள்! வைகோ அறிக்கை
Issues: Human Rights, Srilanka
Region: Tamil Nadu
Category: Articles
சிவந்தனுக்கு வாழ்த்துகள்!
வைகோ அறிக்கை
மரணபூமியில் வதைக்கப்பட்ட தமிழ் இனத்தின் துன்ப ஓலம் காற்றோடு கரைந்து போய்விடாமல், மெல்ல மெல்ல, இப்புவியில் வாழும் மனிதநேய மாந்தர்களின் செவிகளில் ஏறத்தொடங்கி உள்ளது.
அழிவின் பிடியில் இருந்து ஈழத்தமிழ் மக்களைக் காக்கவும், கொடூரக் கொலைகளைப் புரிந்த ரத்தக் காட்டேரி ராஜபக்சே கூட்டத்தை அனைத்து உலக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்கவும், உலகெங்கும் உள்ள தன்மானத் தமிழர்கள் இடையறாத போராட்டங்கள், கிளர்ச்சிகள், அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துகின்ற வகையில் ஈழத்தின் வீரப்பிள்ளை சிவந்தன் இதோ பாரிஸ் பட்டணத்தில் இருந்து கால்நடையாகப் புறப்பட்டு சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா.மன்றத்தின் மனித உரிமைகள் அவையை நோக்கி அறப்போர் நடைப்பயணத்தைத் தொடங்கி விட்டார்.
பகலில் நெருப்பெனக் கொதிக்கும் வெயிலிலும், இரவில் ஊசிமுனையாகத் தைக்கும் கொட்டும் பனியிலும் கால்களில் கொப்புளங்கள் பொத்து வடிய தன்னைத் தானே வருத்திக் கொண்டு நடக்கிறார்.
அவரது பயணம் வெற்றிகரமாக நடைபெறவும், பயணத்தின் குறிக்கோள் ஈடேறவும், அவரது உடல்நிலை பாதிக்காத வண்ணம் இயற்கைத் தாய் துணை புரிய வேண்டும்.
தியாகப் பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புலம் பெயர்ந்த தமிழர்களும், தாய்த் தமிழகத்து மக்களும் வாழ்த்துகளைக் குவித்திடுவீர்!

