என்.எல்.சி. நிறுவன பங்குகள் விற்பனையைக் கைவிட வேண்டும் . வைகோ அறிக்கை
Issues: Economy, Politics
Region: Tamil Nadu
Category: Press Releases
என்.எல்.சி. நிறுவன பங்குகள் விற்பனையைக் கைவிட வேண்டும்
வைகோ அறிக்கை
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ‘மினிரத்னா’ தகுதியைப் பெற்று, தொழிலாளர்களின் கடும் உழைப்பால், தற்போது ‘நவரத்னா’ தகுதிக்கு ஏற்ப இயங்கிவரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 10 சதவிகிதப் பங்குகளை விற்பனை செய்ய நடுவண் அரசு முடிவு செய்து இருப்பது, அதிர்ச்சி அளிக்கின்றது.
இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு, பொன்விழா கொண்டாடிய என்.எல்.சி. நிறுவனம், நடப்பு ஆண்டில் மட்டும் 822 கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளது.
2002 ஆம் ஆண்டில், அன்றைய நடுவண் அரசு என்.எல்.சி. நிறுவனத்தின் 51 சதவிகிதப் பங்குகளை, தனியாருக்கு விற்பனை செய்யத் தீர்மானித்த நேரத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. அதனை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியது. மேலும் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நேரடி கவனத்துக்குக் கொண்டு சென்றபோது, என்.எல்.சி. நிறுவனம் தனியார்மயம் ஆகாது’ என்று பிரதமர் உறுதி அளித்தார்.
2004 இல் காங்கிரஸ் கூட்டணி அரசு பொறுப்பு ஏற்றவுடன், 2006 இல் இந்நிறுவனத்தின் 10 சதவிகிதப் பங்குகளை விற்பனை செய்ய முயன்றது. அப்போதும் நடுவண் அமைச்சர் அவையில் இடம் பெற்று இருந்த தி.மு.க. என்.எல்.சி. நிறுவனத்தைப் பாதுகாக்க முன்வராமல், தி.மு.க. தலைவர் கருணாநிதி, என்.எல்.சி. தொழிலாளர்களே பங்குகளை வாங்கிட ஆவன செய்யப்படும்’ என்று குழப்பினார்.
ஆனால். என்.எல்.சி. தொழிலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தால், நடுவண் அரசு வேறுவழியின்றி பணிந்தது. தற்போது மத்தியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உடனே, என்.எல்.சி. நிறுவனம் அவர்களின் கண்களை உறுத்திக் கொண்டு இருக்கிறது.
பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. பெரும் வளர்ச்சி பெற்று, ஒரிசா, இராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் தனது திட்டங்களை விரிவுபடுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் தூத்துக்குடி, ஜெயம் கொண்டம் அனல்மின்சார உற்பத்தித் திட்டங்களும் என்.எல்.சி. மூலம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
தமிழ்நாட்டின் மின்தேவைக்கு இன்றியமையாததாக விளங்கும் என்.எல்..சி. நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்கத் தீர்மானித்துள்ள காங்கிரஸ் அரசு, அதற்கு முதல்படியாக 10 சதவிகித பங்குகளை விற்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.
என்.எல்.சி. நிறுவனத்தில் பணியாற்றும் 20,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், நவரத்னா தகுதிபெற்ற பொதுத்துறை நிறுவனமாக என்.எல்.சி. வளர்ச்சி பெறவும், மத்திய அரசு, என்.எல்.சி. நிறுவனத்தின் 10 பங்குகள் விற்பனை முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறேன்.
பொதுச்செயலாளர் வைகோ 25.6.2009 அன்று விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்து இருக்கிறார்.

