கேரளத்தின் சதியைத் தடுக்க திரண்டு வாரீர்! வைகோ வேண்டுகோள்
Issues: Human Rights, Law & Order, National
Region: Tamil Nadu
Category: Articles, Headlines
கேரளத்தின் சதியைத் தடுக்க திரண்டு வாரீர்!
வைகோ வேண்டுகோள்
பென்னி குயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையை எப்படியும் உடைத்துவிடுவோம் என்று கொக்கரிக்கிறது கேரள அரசு. பாம்பாற்றுக்கு குறுக்கே அணையைக் கட்டி, அமராவதி படுகையில் உள்ள தமிழக மக்களுக்குக் குடிநீரும் பாசன நீரும் கிடைக்காமல் பெரும் துன்பத்திற்கு ஆளாக்க முயல்கிறது.நெல்லை மாவட்ட விவசாயிகள் பயன்பெற்று வந்த செண்பகவல்லி தடுப்பு அணையை பழுதுபார்க்க அனுமதிக்கவில்லை. குமரி மாவட்டத்தில் நெய்யாறு இடதுகரை சானலில் தண்ணீர் விடவில்லை. 2000டி.எம்.சி. தண்ணீர் கேரள நதிகளில் இருந்து அரபிக் கடலில் வீணாகும் நிலையில், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர மறுப்பதோடு, கிடைக்கின்ற சிறிதளவு தண்ணீரையும் தடுக்க கேரள அரசு முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றார்கள்.
சிறுவாணி அணைக்குக் கீழே, சிறுவாணி நதி கேரளாவிற்கு உள்ளே 30 கிலோமீட்டர் ஓடுகிறது. அங்கேயே பவானி நதியுடன் கலக்கிறது. சிறுவாணி அணையில் இருந்து, 20 ஆவது கிலோ தொலைவில் உள்ள சித்தூர் என்ற இடத்தில் ஒரு அணையைக் கட்ட கேரள அரசு முயற்சிகளைத் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 6 டி.எம்.சி. வரை தண்ணீரை கேரளாவிற்குள் திருப்பி, சுமார் 4,900 ஹெக்டேர் அளவிற்கு புதிய பாசனப்பகுதிகளை ஏற்படுத்தத் திட்டம் வகுத்து அதற்காக, 460 ரூபாய் கோடி வரை செலவு செய்யவும் கேரள அரசு தயாராகி வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, பவானி ஆற்றின் குறுக்கே முக்காலி என்ற இடத்தில் 1 டி.எம்.சி. தண்ணீரைத் திருப்ப கேரளா முயற்சி செய்தது. தமிழக விவசாயிகளின் எதிர்ப்பால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், தற்போது கேரள அரசு தடுக்க நினைப்பது 6 டி.எம்.சி. தண்ணீர். இதனால் பவானி நதிக்கு வருகின்ற பெருமளவு நீர் குறையும். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள். கோவை மாவட்ட மக்களுக்கு அதிக அளவு குடிநீர் பவானியில் நதியில் இருந்துதான் கிடைக்கிறது. அணை கட்டுவதனால் குடிநீருக்கும் ஆபத்து வரும்.
முல்லைப் பெரியாரில் அணையை உடைக்க நினைத்து முடியாமல் போனதால், தற்போது பவானி நதிக்கு ஆபத்து விளைவிக்கப் பார்க்கிறார்கள். எனவே, இத்திட்டத்தைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும். ஏற்கனவே, ம.தி.மு.க. மேட்டுப்பாளையத்திலும், கோவையிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. மேலும், இத்திட்டத்தைக் கேரள அரசு கைவிடும்வரை ம.தி.மு.க. மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்துச்செல்லும்.
வருகின்ற 25 ஆம் தேதி, திங்கள் கிழமை அன்று, கோவையில், அனைத்துக் கட்சிகளின் சார்பில் நடைபெற இருக்கின்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தில், கழகக் கண்மணிகளும், விவசாயப் பெருமக்களும், பொதுமக்களும் பெரும் திரளாகப் பங்கு ஏற்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
20.06.2012 மறுமலர்ச்சி தி.மு.க

