இளந்தென்றல், நாகப்பட்டினம்: உயர்நீதிமன்ற மோதல் இலங்கை தமிழர் பிரச்சினையை திசை திருப்பும் முயற்சியாக தாங்கள் கருதுகிறீர்களா?
Category: Vaiko Answers
இலங்கைத் தீவில் சிங்கள இனவெறி அரசின் அதிபர் மகிந்த ராஜபக்ஷே நடத்துகிற இரத்தவெறி கொண்ட கொலைபாதக இராணுவத் தாக்குதலால் தமிழ் இனமே அழிந்து போகுமோ எனும் அபாயம் சூழ்ந்துள்ளது.
இக்கொடுமை கண்டு கொதித்து எழுந்த தமிழக வழக்கறிஞர்கள் கடந்த நான்கு மாதகாலமாகத் தொடர் போராட்டங்களை அறவழியில் நடத்தி வருகின்றனர். கட்சி - மத - ஜாதி எல்லைகளைக் கடந்து தம் சொந்த சகோதர மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று இரத்தபாசத்தால் துடிக்கும் உணர்வுடன் வழக்கறிஞர்கள் ஈழத் தமிழர்களுக்காகப் போராடி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தை நீடிக்க விடக்கூடாது; முறியடிக்க வேண்டும் என்ற தீய நோக்கத்தோடு கூட்டணிக் கட்சியான காங்கிரசைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆளுங்கட்சி பல வழிகளிலும் முயன்றது.
ஈழத் தமிழர்கள் மானத்தோடும் உரிமையோடும் வாழ்வதற்காக மரணத்துக்கு அஞ்சாது தியாகப் போர் நடத்தி வருகின்ற விடுதலைப் புலிகளை இழிவுபடுத்தியும், புலிகளின் ஆதரவாளர்கள் மீது களங்கம் சுமத்தியும் தொடர்ந்து வசைபாடி வருகிற தமிழ் இனத் துரோகி சுப்பிரமணிய சுவாமி மீது வழக்கறிஞர்கள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்திய சம்பவத்தைச் சாக்காக வைத்துக் கொண்டு வழக்கறிஞர்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறையைத் தமிழக அரசு காவல்துறை மூலம் ஏவியது.
ஈழத் தமிழர்களுக்காக வழக்கறிஞர்கள் நடத்தும் போராட்டத்தை நீடிக்க விடக்கூடாது என்பதுதான் போலீஸ் அராஜகத்துக்கு மூல காரணமாகும்.
- வைகோ