பிரபாகரனின் தாய் உயிருக்கு இந்தியாவே பொறுப்பு ! மத்திய அரசு அநீதி ...... தமிழக அரசு உடந்தை!! குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வைகோ .
விவகாரங்கள்: மனித உரிமை, இலங்கைத் தமிழர்
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்
பிரபாகரனின் தாய் உயிருக்கு இந்தியாவே பொறுப்பு ! மத்திய அரசு அநீதி ...... தமிழக அரசு உடந்தை!! குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வைகோ .
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக விமானம் மூலம் 16.4.2010 அன்று மலேசியாவில் இருந்து தமிழகம் வந்திருந்தார். தரையிறங்கவிடாமல், அதேவிமானத்தில் அவர் திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறார். முறைப்படி இந்திய அரசுக்கு விண்ணப்பித்து விசா பெற்று தமிழகம் வந்திருந்த எண்பது வயதான உடல்நலம் குன்றிய மூதாட்டி யை விமானத்தில் இருந்து கீழே இறங்க விடாமல் செய்த செயல், தமிழர் நல அமைப்புகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து வைகோவிடம் பேசினோம்....
பார்வதி அம்மாள் உடல்நிலை எப்படி உள்ளது?
“பார்வதி அம்மாள் அண்மையில் தன் கணவரை இழந்ததால் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் நினைவு வரும்போது எல்லாம், ‘ஐயா ஐயா’ என்று கணவரை நினைத்து அழு கிறார். பக்கவாதத்தால் அவதிப் பட்டு வருகிறார். இலங்கையில் நடந்த தமிழ் இனப் படுகொலைகள், அவரை நிலை குலையச் செய்து விட்டது. பக்கத்தில் இருந்து பராமரிக்கப் பிள்ளைகள் இல்லை. அவர்கள் வாழ்ந்த வல்வெட்டித் துறை வீடு சிங்களவரால் அடித்து சேதப் படுத்தப்பட்டது. சிவாஜிலிங்கத்தின் முயற்சியால் அவர் மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து கனடாவில் வசிக்கும் மகள் விநோதினி வசம் அவரை ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற் கிடையே, மலேசியாவில் தங்கி இருக் கின்ற அனுமதிக்காலம் 16.4.2010 இல் முடிவடைய இருந்தது.”
பார்வதி அம்மாள் எதற்காக சென்னை அழைத்து வரப்பட்டார்?
“உயர் நவீன மருத்துவ சிகிச்சைக்கு வாய்ப்புள்ள சென்னைக்கு அவரை அழைத்துவந்து, வைத்தியம் பார்த்து, அதன் பின்னர் கனடாவுக்குச் செல்லும் அனுமதியைப் பெறலாம் என்று அண்ணன் பழ.நெடுமாறனும், நானும் முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தோம். இந்தியா வருவதற்கு முறைப்படி அனுமதி பெற பார்வதி அம்மாள் விண்ணப்பித்த தன் பேரில், இந்திய அரசு அனுமதி வழங்கி விசாவும் கொடுத்துவிட்டது. பிரபாகரனின் தாயார் என்று தெரிந்தே விசா கொடுக்கப்பட்டது. அதன்படி, 16 ஆம் தேதி மாலை மலேசியாவில் விஜய லட்சுமி என்ற பெண்ணுடன் புறப்பட்டு, இரவு 10.45 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார். அவரை அழைத்து வருவதற்காக நெடுமாறனுடன் விமான நிலையத்தில் வெளியே காத்திருந்தோம்.”
அப்போது அங்கே என்ன நடந்தது?
“10.15 மணி அளவில் திடீரென தமிழக போலி[hர் குவிக்கப்பட்டனர். வீடியோ கேமராக்களோடு உளவுத்துறை போலீசார் வந்தனர். இதனால் எங்களு க்குச் சந்தேகம் ஏற்பட்டு, விமான நிலை யம் நோக்கிச் சென்றபோது, சாலையிலே யே தமிழகக் காவல் துறையினர் எங்களை வழிமறித்தனர். ‘எங்களை ஏன் தடுக்கி றீர்கள், இதென்ன சர்வாதிகார நாடா?’ என்று கேட்டேன். காவல்துறை அதிகாரி ஒருவர் என் கையைப்பற்றி இழுத்துப் பிடரியைப் பிடித்துத் தள்ளினார். அதிர்ச்சி அடைந்த நெடுமாறன், எந்த சட்டவிதியின் கீழ் எங்களைத் தடுக்கிறீர்கள்? என்று கேட்டார். விமான நிலையத்துக்குள் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினருக்கே அதிகாரம் உள்ளது. உங்களுக்கு இங்கே என்ன வேலை? என்று கேட்டு பயணிகளை வரவேற்கும் இடத்தில் அமர்ந்துவிட்டோம். அதற்குள் பார்வதி அம்மாள், அவருக்குத் துணையாக வந்த விஜயலட்சுமி ஆகி யோரை வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பி விட்டார்கள்.”
அவரைத் திருப்பி அனுப்பக் காரணம் என்ன?
“எண்பது வயதில் இயக்க நடவடிக்கை களில் ஈடுபடுவார் என்று இந்திய அரசு அஞ்சுகிறதா? அவர் திருப்பி அனுப்பப் பட்ட மறுநாளே ராஜபக்சேவின் மகன் கள் பெங்களூருவில் ஐ.பி.எல். கிரிக்கெட் பார்க்க சென்னை வந்தார்களே, என்ன அநியாயம்? கொலைபாதகம் செய்த ராஜ பக்சேவுக்கு திருப்பதியில் பூரணகும்ப வரவேற்பு! ஆனால், ஒரு பக்கம் விசா வழங்கிவிட்டு, மறுபக்கம் பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பியதன் மர்மம் புரியவில்லை.”
இதற்கு யார் காரணம்?
“தமிழக முதல்வர் கருணாநிதிதான் காரணம்! பார்வதி அம்மாள் தமிழ் நாட்டுக்கு வருகிறார் என்பதை உளவுத் துறை மூலம் தெரிந்து கொண்டு, அவரைத் திருப்பி அனுப்பி விட்டார் கருணா நிதி! அவர் கொடுத்த அழுத்தம் காரண மாகவே இந்திய அரசு, பார்வதி அம் மாளைத் திருப்பி அனுப்பி இருக்கிறது.”
பார்வதி அம்மாளை முதல்வர் ஏன் திருப்பி அனுப்பவேண்டும்?
“இதற்குக் காரணம் எல்லாம் சொல்ல விரும்பவில்லை! என் மீதும், நெடுமாறன் மீதும் விமான நிலையத்தில் தமிழகக் காவல்துறையினர் நடத்திய அராஜகம், இதற்குச் சாட்சி. கருணாநிதியைக் கேட்டுத்தான் முக்கிய முடிவுகளை எடுக்கிறேன் என்று புதிய தலைமைச் செயலகத் திறப்பு விழாவில் மன்மோகன் சிங்பேசுகிறார். இதனால் பார்வதி அம் மாள் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்தில், எனக்குச் சம்பந்தம் இல்லை என்று சொல்லி, கருணாநிதி தப்பிக்க முடியாது. என்னுடைய கேள்வி இதுதான். அங்கே தமிழகக் காவல்துறை வரவேண்டிய அவசியம் என்ன?”
இந்தத் தகவல் முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்தால், விமானநிலையத்தில் போராட் டம் நடத்தியாவது பார்வதி அம்மாள் தரை இறங்க அனுமதி பெற்று இருக்க முடியும் என்று தமிழ் உணர்வாளர்கள் வருத்தப்படு கிறார்களே?
“கருணாநிதியைக் குற்றம் சொல்லத் துணிச்சல் இல்லாதவர்கள் இப்படிச் சொல்லிக் கொண்டு இருக்கலாம்! சிலர் வருத்தப்பட்டு இருக்கலாம். ஆனால், உடல்நலம் இல்லாமல் வருகிறார். நாங்கள் சிகிச்சைக்காக ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நேரத்தில் பரபரப்பு வேண்டாம் என்று நெடுமாறன் நினைத்து இருக்கிறார். விசா கொடுக்கப்பட்டதால், அவரைத் திருப்பி அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.”
ம.தி.மு.க. அறிவித்து இருக்கும் உண்ணா நிலைப் போராட்டத்தின் நோக்கம்?
“பார்வதி அம்மாளுக்கு மத்திய அரசு செய்த அநீதியில், துரோகத்தில் தமிழக அரசு உடந்தையாக இருந்தது என்பதை, மக்கள் மன்றத்துக்குக் கொண்டு போகப் போகிறோம். அவரை சென்னைக்கு அழைத்துவந்து சிகிச்சை அளிக்க இந்திய அரசு அனுமதிக்க வேண்டும். மாறாக, அவர் திரும்பவும் இலங்கை செல்ல நேர் ந்து, அங்கே அவரது உடல் நலத்துக்கோ, உயிருக்கோ கேடு ஏற் பட்டால், இந்திய அரசுதான் அதற்குப் பொறுப்பு” என்று முடித்துக் கொண்டார் வைகோ.
- குமுதம் ரிப்போர்ட்டர், 25.4.2010
நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்.

