மே தின வாழ்த்து-வைகோ.
விவகாரங்கள்: சர்வதேசம், தொழிலாளர், தேசிய
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்
மே தின வாழ்த்து-வைகோ.
மேதினி எங்கும் மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் நன்னாளாக மே தினம் இன்று மலர்ந்து உள்ளது. ‘உலகம் உழைப்பவர்களுக்குச் சொந்தமானது’ என்ற உன்னத நிலைமையை உருவாக்கி இருப்பதில், மே தினத்தின் பங்கு மகத்தானது என்றால் அது மிகை இல்லை! ஒருகாலத்தில், அறுவடைத் திருநாளுக்கான அடையாளமாக கருதப்பட்டு, உழவர்கள் கொண்டாடிய இந்த நாளில், சிகாகோவில் வைக்கோல் சந்தை சதுக்கத்தில் (Hay Market) தொழிலாளர்கள் நடத்திய பேரணியில், அரச பயங்கரவாதம் விளைவித்த அடக்குமுறை அநீதிக்கு எதிராகத் தொழிலாளர் வர்க்கம் வெகுண்டு எழுந்ததன் நினைவாக, 1899-இல் நடைபெற்ற பன்னாட்டு சோசலிசப் பேரவையில் இந்நாளைத் தொழிலாளர் நாளாகக் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது.
அன்றுதொட்டு இன்று வரை, உலக நாடுகள் அனைத்திலும் உழைப்போர் மகிழ்வுடன் கொண்டாடும் நிலை ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் விலைவாசி ஏற்றத்தாலும், கடும் மின்வெட்டாலும் கொடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ள வேளையில், இந்த மே தினம், உழைக்கும் வர்க்கத்திற்காக உழைக்கும் அனைவருக்கும் புதிய உத்வேகத்தை வழங்கட்டும் என்று வாழ்த்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

