அண்ணா பிறந்த நாளில் சிறைவாசிகளை விடுதலை செய்க! வைகோ கோரிக்கை!
விவகாரங்கள்: மனித உரிமை
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்
அண்ணா பிறந்த நாளில்
சிறைவாசிகளை விடுதலை செய்க!
வைகோ கோரிக்கை!
சிறைச்சாலை என்பது தண்டிக்கும் இடமில்லை. சீர்திருத்தும் இடம் என்ற கோட்பாட்டை உலகில் பல நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. சந்தர்ப்ப சூழ்நிலையால் நேர்ந்துவிட்ட சம்பவத்தால், நீதிமன்றத் தீர்ப்பால் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்படும் கைதிகள் சிறைச்சாலையில் திருந்திய மனிதர்களாக மாறி முறையான வாழ்க்கை வாழத் துடிக்கிறார்கள்.
சிறைவாசிகள், அதிலும் ஆயுள் தண்டனை அடைந்தோர் பத்தாண்டுகள் தண்டிக்கப்பட்டோர் சில குற்றப் பிரிவுகளில் தண்டனை பெற்றதைக் காரணம் காட்டி விடுவிக்கப்படாமலே சிறையில் வாடுகின்றனர். பல சிறைவாசிகள் 15 ஆண்டுகள் கடந்தும் ஏன் 20 ஆண்டுகள் கடந்தும் சிறையில் இருக்கின்றனர்.
அவர்களது குடும்பங்கள் சின்னாபின்னமாகி, மரணத்தைவிடக் கொடுமையான மனத் துன்பங்களுக்கு இச்சிறைவாசிகள் ஆளாகியுள்ளனர். ஏற்கனவே நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்களை மேலும் புதிதாகத் தண்டிப்பதைப் போல இந்த நடவடிக்கைகள் அமைகின்றன.
பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள சிறைவாசிகள் மனம் பக்குவப்பட்ட வர்களாகவே விடுதலை பெற்றபின் நெறியோடு வாழவே துடிக்கின்றனர்.
இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் 14 ஆண்டுகளுக்கு மேல் கைதிகளின் சிறைவாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற சட்டத்திருத்தம் இந்திய நாடாளுமன்றத்தில் வந்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்து நாடாளுமன்றத்தில் நான் உரையாற்றினேன். நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்திருத்தத்தில் அதனை எதிர்த்து கருத்து சொன்னது நான் மட்டுமே. பொது மன்னிப்பில் குற்றப்பிரிவுகளைக் காட்டி விடுவிக்கப்படாத சிறைவாசிகளை விடுவிக்க அரசு முன்வர வேண்டும்.
சிறைவாசியைப் பரோல் விடுப்பில் அனுப்புவது ஒரு மனிதாபிமான நடவடிக்கை ஆகும். குடும்பத்தினருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ அல்லது குடும்பத்தில் ஏற்படும் நற்காரியங்களில் பங்கேற்கவோ, குடும்பத்தில் ஏற்படும் துயரச் சம்பவங்களில் அல்லது அவர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டிய அவசியம் கருதியோ பரோல் விடுப்பு தரப்படுகிறது. அப்படி விடுப்பில் செல்லும் சிறைவாசி தவிர்க்க இயலாத காரணங்களால் குறிப்பிட்ட நாளில் சிறைக்குத் திரும்பி வர இயலாமல் ஓரிரு நாட்கள் தாமதம் ஏற்பட்டு விட்டால் இந்தியத் தண்டனைச் சட்டம் 224 பிரிவுகளின்கீழ் மேலும் தண்டிக்கப்படுகின்றனர். பொது மன்னிப்பில் அவர்கள் விடுவிக்கப்படுவதும் கிடையாது. இந்த அணுகுமுறை மாற்றப்பட்டு மனிதாபிமான அடிப்படையில் அவர்களையும் பொது மன்னிப்பில் விடுவிக்க அரசு முன்வர வேண்டும்.
வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு சிறைவாசி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தால் பரோல் விடுப்பு கிடையாது என்பது எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத மனிதாபிமானமற்ற நடவடிக்கை ஆகும். நீதிமன்றத்திலே மேல்முறையீடு ஆண்டுக் கணக்கில் நீடித்துக் கொண்டே போகும்.
நீதிமன்றத்தில் விடுதலையாகக் கூடிய ஒருவருக்கும் பரோல் கிடையாது என்பது நியாயமற்றதாகும். எனவே, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தவர்களுக்கும் பரோல் விடுப்பு வழங்கப்பட வேண்டும்.
திருந்திய மனிதர்களாகச் சிறைச்சாலையின் உள்ளே ஏராளமான மனிதர்கள் பொதுமன்னிப்பு பெறமுடியாமலும், பரோலில் செல்ல முடியாமலும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். எனவே, இந்த குறைபாடுகளைப் போக்க உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழா வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போர் விடுவிக்கப்பட வேண்டும். பரோல் விடுப்பில் சென்று குறிப்பிட்ட நாளில் திரும்பாதவர்களுக்கு ஒருநாள் இருநாள் தாமதமாகிவிட்டது என்று காரணம் காட்டி அவர்கள் விடுதலை பெற முடியாத இன்னலுக்கு ஆளாக்கும் நடைமுறையை மாற்றி, அவர்களையும் மனிதாபிமானத்தோடு விடுதலை செய்ய தமிழக அரசு முன் வரவேண்டும்.
வைகோ
பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
‘தாயகம்’
சென்னை - 8
22.08.2010

