நதி போல் தொடர்கிறது 'நான்ஸ்டாப்' பயணம் : மறுமலர்ச்சியை நோக்கி ம.தி.மு.க.,- தினமலர் கட்டுரை.
விவகாரங்கள்: அரசியல்
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: தொகுப்புகள்
நதி போல் தொடர்கிறது 'நான்ஸ்டாப்' பயணம் : மறுமலர்ச்சியை நோக்கி ம.தி.மு.க.,
டிசம்பர் 13,2009,
அடுத்த சட்டசபை பொது தேர்தலுக்குள், வலுவான கட்சியாக மாற்றுவதற்கும், தொகுதிப் பங்கீட்டில் கணிசமான இடங்களை பெற்று, மக்களின் அங்கீகாரத்தை பெற வேண்டும் என்பதற்காக, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பெரும் முயற்சி எடுத்து வருகிறார்.
மாநிலம் முழுவதும் சென்று மக்கள் சக்தியைத் திரட்ட வேண்டும் என்பதற்காக, "நூறு நாட்கள்' என்ற ம.தி.மு.க., கொடி பயணத்தை அவர் துவக்கினார். கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய இரு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இரவில் தங்கினார். கிராம மக்களையும், கட்சித் தொண்டர்களையும் சந்தித்து பேசினார். ஆனால், தொடர்ந்து மற்ற மாவட் டங்களில் அவரால் பயணத் தை தொடர முடியவில்லை.முல்லைப் பெரியாறு அணை விவகாரம், இலங்கை தமிழர்கள் பிரச்னை, திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல் என்ற மாறுபட்ட அரசியல் சூழ்நிலை, கொடி பயணத்திற்கு தடை விதித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கேரள அரசு தமிழகத்தை வஞ்சித்து விட்டது என்பதை பொதுமக்களிடம் நேரடியாக எடுத்துச் செல்வதற்காக, தேனியில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்.
தொடர்ந்து, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளை சந்தித்தும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வைகோ நடை பயணம் மேற்கொண்டார்.ஏறக்குறைய, இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் பாசன பகுதிகளின் மேன் மைக்காக, 640 கிராமங்களில் நடக்க அவர் திட்டமிட்டார். சமீபத்தில் அவர் முதல் கட்ட நடை பயணம் மேற்கொண்ட போது திடீரென வைகோவிற்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் அந்த பயணத்தை ரத்து செய்தார்.திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியானதும், தேர்தல் பணியை தீவிரப்படுத்தினார். கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க., வேட்பாளர்களை தனது கட்சி செயல் வீரர்கள் கூட்டத்தில் அறிமுகப்படுத்தி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, வரும் 29ம் தேதி கேரள மாநிலத்திற்கு தமிழகத்திலிருந்து செல்லும் பொருட்களுக்கு தடையை விதிக்க வேண்டும் என்ற போராட்டத்திலும் வைகோ பங்கேற்கிறார். கொடி பயணம், முல்லைப் பெரியாறு அணை விவகார நடை பயணம் நிறுத்தி வைக்கப்பட்டது குறித்து ம.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:ம.தி.மு.க., என்பது நீரோட்டமாகவும், உயிரோட்டமாகவும் இருக்க வேண்டும் என, வைகோ விரும்புகிறார். நீரோட்டம் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். வைகோவும் அரசியல் வாழ்க்கையில் தொண்டர்களின் நலனுக்காகவும், கட்சியினரின் எதிர்காலத்திற்காகவும் அவர் நதியை போல் ஓடிக் கொண்டு இருக்கிறார்.முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர் பான நடை பயணத்தில், விவசாயிகளும் தன்னுடன் நடக்க வேண்டும் என கட்சியினர் விரும்பினர். ஆனால், வைகோ விரும்பவில்லை.
விவசாயிகளுக்காக நாம் போராடுகிறோம் என்ற நல்ல எண்ணத்தை விவசாயிகளின் இதயத்தில் விதைப்போம். ஒரு நாள் நிச்சயம் நாம் பயன் அடைவோம். அப்போது நல்ல அறுவடை செய்வோம்' என வைகோ தெரிவித்தார். நடக்க தொண்டர்கள் கூட்டம் இல்லை என்பதால், அவர் நடை பயணத்தை ரத்து செய்யவில்லை. இடைத்தேர்தல் பணி முடிந்ததும் நிறுத்தி வைக்கப்பட்ட நீண்ட நெடிய பயணத்தை அவர் மேற்கொள்வார். அந்த லட்சிய பயணம் "நான் ஸ்டாப்' பயணமாகவே இருக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நன்றி தினமலர்

