தமிழர்களின் கண்களைக் கட்டி, இலங்கை ராணுவத்தினர் சுட்டுக் கொல்வது போன்று சேனல் 4 தொலைக்காட்சியில் வெளியான விடியோ உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக டைம்ஸ் இதழ் தெரிவித்திருக்கிறது.
விவகாரங்கள்: இலங்கைத் தமிழர்
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: தொகுப்புகள்
தமிழர்களின் கண்களைக் கட்டி, இலங்கை ராணுவத்தினர் சுட்டுக் கொல்வது போன்று சேனல் 4 தொலைக்காட்சியில் வெளியான விடியோ உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக டைம்ஸ் இதழ் தெரிவித்திருக்கிறது.
இலங்கை ராணுவத்தினர் தங்களிடம் பிடிபட்ட தமிழர்களை நிர்வாணப்படுத்தி அவர்களது கண்களைக் கட்டி வரிசையாகச் சுட்டுக் கொல்வது போன்ற விடியோ சில மாதங்களுக்கு முன்பு சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு ஆதாரமாகவும் இந்த விடியோ கருதப்பட்டது. ஆனால், இந்த விடியோ போலியானது என இலங்கை அரசு தொடர்ந்து தெரிவித்து வந்தது.
இந்த நிலையில், இந்த விடியோ உண்மையானது என தங்களது புலனாய்வில் தெரியவந்திருப்பதாக தி டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. டைம்ஸ் இதழுக்காக பிரெடரிக்ஸ் என்கிற விடியோ தடயவியல் நிபுணர் நடத்திய ஆய்வில் இது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
துப்பாக்கியால் சுடும்போது, அதிலிருந்து வெளிப்படும் புகை, சத்தம் போன்றவை உண்மையானவை எனவும், விடியோவில் எந்தவிதமாற்றமும் செய்யப்படவில்லை எனவும் ஃபிரடெரிக்ஸ் தெரிவித்திருப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுடப்பட்டவர்கள் பின்னோக்கி விழுந்தது உண்மையானதாக இருப்பதாகவும் தெரிகிறது.
இந்தச் செய்தி மூலம் இலங்கை ராணுவத்துக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பான புகார்கள் வலுவடையக்கூடும் எனத் தெரிகிறது.
நன்றி தினமணி.

