விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோவின் கோரிக்கை
விவகாரங்கள்: பொருளாதாரம், சுற்றுச்சூழல், மனித உரிமை, இலங்கைத் தமிழர்
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், அறிவிப்புகள்
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க
சென்னை உயர் நீதிமன்றத்தில்
வைகோவின் கோரிக்கை
தமிழ்ஈழ விடுதலைப்புலிகளுக்கு இந்திய அரசு விதித்த தடையை நீக்க வேண்டுமென கடந்த ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தொடுத்த ரிட் மனு உயர் நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கோரி இன்று 16.12.2011 உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் இக்பால், நீதிபதி சிவஞானம் அமர்வில் வைகோ நேரில் ஆஜராகி வாதாடினார்.
"இந்திய அரசு நியமித்த தீர்ப்பாயம் தமிழ்ஈழ விடுதலைப் புலிகள் மீது மத்திய அரசு விதித்த தடையை ஏற்றுக் கொண்டு வழங்கிய ஆணையை எதிர்த்து இந்த உயர் நீதிமன்றத்தில் நான் ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறேன். தடை உத்தரவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு நீட்டித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதியன்றும் இந்த உயர் நீதிமன்றத்தில் இதுபற்றி நான் குறிப்பிட்டேன். எனவே, எனது ரிட் மனு மீது விரைவில் விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்று வைகோ கூறினார். தலைமை நீதிபதி நீதியரசர் இக்பால் அவர்கள், \"உங்கள் ரிட் மனு ஜனவரியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்\" என்றார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:
இந்தியாவில் இதுவரை தடைசெய்யப்பட்ட எந்த இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று ரிட் மனு எந்த நீதிமன்றத்திலும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை. ஆனால், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க நான் தாக்கல் செய்த ரிட் மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு அனுமதித்ததே முதல்கட்ட வெற்றியாகும். 2012 ஜனவரி மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி கூறியிருக்கிறார். நியூசிலாந்து நாட்டின் உச்ச நீதிமன்றம் விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல; அவர்கள் நாட்டின் விடுதலை இயக்கம் என்று தீர்ப்பளித்துள்ளது. ஹேக் நீதிமன்றமும் அதுபோல தீர்ப்பு அளித்துள்ளது. எனவே, இந்தியாவிலும் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கும் நிலை உருவாகும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன்.
‘தாயகம்’ தலைமைக் கழகம்
சென்னை - 8 மறுமலர்ச்சி தி.மு.க
16.12.2011

