டிசம்பர் 25 மாலையில் மெரினா கடற்கரையில் திரண்டிடுவோம் வைகோ அறிக்கை
விவகாரங்கள்: சுற்றுச்சூழல், விவசாயம், மனித உரிமை, சட்ட ஒழுங்கு, புறநகர்
மாவட்டம்: சென்னை - வடக்கு, சென்னை - தெற்கு
செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், அறிவிப்புகள்
டிசம்பர் 25 மாலையில்
மெரினா கடற்கரையில் திரண்டிடுவோம்
வைகோ அறிக்கை
தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமாகத் திகழும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து சட்ட ரீதியான உரிமையோடு ஐந்து மாவட்டங்களுக்கு பாசனத்திற்கும், குடி தண்ணீருக்கும் பெற்று வரும் தண்ணீரை தமிழகம் இழக்கின்ற பெரும் ஆபத்தை ஏற்படுத்த கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு ஓர வஞ்சகமாக கேரளத்திற்கு ஆதரவாகவும், தமிழ்நாட்டிற்கு விரோதமாகவும் செயல்பட்டு வருகிறது. அணையைப் பாதுகாக்க வேண்டிய கடமையை மத்திய அரசும் செய்யவில்லை, உச்சநீதிமன்றமும் செய்யவில்லை. வரும் அபாயத்தை தடுக்கவே தமிழக மக்கள் கொந்தளித்து போராடுகின்றனர்.
தமிழ் நாட்டிற்கு நிரந்தர கேடு செய்ய கேரளம் முனைந்தால் விளைவுகள் விபரீதமாகும் என எச்சரிக்கவே பொருளாதார முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. அணையை உடைக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டோம் என்றும், புதிய அணை கட்டமாட்டோம் என்றும், 2006 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துவோம் என்றும் கேரளம் முடிவெடுக்கும் வரை தமிழகத்தில் போராட்டம் புதிய புதிய வடிவங்களைப் பெறும்.
அதனால்தான் நாளைய தினம் டிசம்பர் 25 ஆம் தேதி அன்று சென்னை மெரினா கடற்கரையில் பத்தினித் தெய்வம் கண்ணகி சிலைக்கு அருகில் மாலை 3 மணி அளவில் தமிழக உரிமை காக்கும் உணர்வாளர்கள் மக்கள் திரளாக பங்கேற்க மே 17 இயக்கத்தினரும், கலை உலக விற்பன்னர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.
உலகமெல்லாம் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் திரள்கிறோம். “நீதியின் மேல் பசிதாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்” என்றார் இயேசு பெருமான். முல்லைப்பெரியாறில் தமிழ்நாட்டிற்கு நீதி நிலைக்க வேண்டும் என்ற பசிதாகத்தோடு பங்கேற்போம்.
ஆராயாது, தவறனா தீர்ப்பளித்த வேந்தனை எதிர்த்து எரிமலையாய் சீறினாள் கண்ணகி இன்றோ, உண்மையைத் தெரிந்துகொண்டே அதற்கு மாறாக அநீதி செய்யும் மத்திய அரசை எதிர்க்கவே தமிழகத்தின் சீற்றத்தைக் காட்ட கடற்கரையில் திரண்டிடுவோம்.
கட்சி அடையாளங்களையும், கட்சிக் கொடிகளையும் தவிர்க்க வேண்டுகிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
24.12.2011 மறுமலர்ச்சி தி.மு.க

