அமெரிக்காவின் முன்னாள் உதவி அட்டார்னி ஜெனரல் வெயின் வைகோவுடன் சந்திப்பு
விவகாரங்கள்: மனித உரிமை, இலங்கைத் தமிழர்
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: சொற்பொழிவுகள்
அமெரிக்காவின் முன்னாள் உதவி அட்டார்னி ஜெனரலும், தற்போது அமெரிக்காவில் வாழும் ஈழத் தமிழர்களுக்காக வழக்கறிஞராக செயல்பட்டு வருபவருமான புரூஸ் வெயின் (Bruce Fein) கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களை 22.1.2009 அன்று தாயகத்தில் சந்தித்து ஒன்றரை மணி நேரம் உரையாடினார்.
ஈழத் தமிழர்களின் மீது நடைபெற்று வரும் இனவெறித்தாக்குதல் குறித்து வைகோவுடன் புரூஸ் வெயின் விவாதித்தார். அந்தத் தமிழ்மக்கள் மீது நடைபெறுகின்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் மற்றும் இனப்படுகொலை குறித்து வழக்கு தொடர இருப்பதைப் பற்றி விவாதித்தார்.
இலங்கை அரசின் இராணுவச் செயலாளர் கோத்தபைய ராஜபக்ஷே (Gotabhaya Rajapaksa), , கொலைகார இராணுவத் தளபதி சரத் பொன்சேகா (Sarat Fonseka) இருவரும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்கள். தற்போது தமிழ் இனப் படுகொலையைச் செய்து வருகின்ற குற்றத்திற்காக அமெரிக்க நாட்டு நீதிமன்றத்தில் அமெரிக்க சட்டப்படி அவர்கள் மீது புரூஸ் வெயின் வழக்கு தொடர இருக்கின்றார். இலங்கையில் நடைபெறும் போர், அமெரிக்காவில் ஏற்பட்டு உள்ள அரசியல் மாற்றம் மற்றும் உலகளவில் நடைபெறுகின்ற இனப்போராட்டங்கள் குறித்து விவாதித்தார்.
சிறந்த வழக்கறிஞரான புரூஸ் வெயின், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் பல கட்டுரைகளை எழுதி உள்ளார். மனித உரிமை ஆர்வலரான புரூஸ் வெயின் மனித உரிமை மீறல் குறித்து பல நடவடிக்கை எடுத்து வருபவர். உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகின்ற இனப்போராட்டங்கள் குறித்து புரூஸ் வெயின் எழுதியுள்ள கட்டுரைகள் மனித உரிமை மீறல் குறித்து அவருடைய அக்கறையை வெளிப்படுத்துகின்றது.
புரூஸ் வெயின் அவர்களைப் பற்றிய செய்தி டிசம்பர் 2008 தமிழ்நெட் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

