பொதுவாழ்வுக்குப் பெருமை சேர்த்தவர் ஆர்.வி.! வைகோ புகழாரம்!
விவகாரங்கள்: தேசிய
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: சொற்பொழிவுகள்
‘ஆர்.வி.’ என்று இரண்டு எழுத்துகளால் அனைவராலும் மதிப்போடு அழைக்கப்பட்ட ஆர். வெங்கட்ராமன் அவர்கள், இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டுச் சிறைசென்றவர். தியாக வாழ்வை ஏற்றவர்.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டின் தொழில் அமைச்சராகப் பணி ஆற்றி, நெய்வேலி நிலக்கரி நிறுவனம் உள்ளிட்ட பல பெருந்தொழில் நிறுவனங்கள் அமைவதற்கும், தமிழகத்தில் தொழில் வளம் பெருகுவதற்கும் அடித்தளம் அமைத்தவர்.
ஆழ்ந்த புலமையும், மதிநுட்பமும் மிக்க அவர், நல்ல எழுத்தாளரும் ஆவார். சிறந்த நாடாளுமன்றவாதி. இந்திய நிதி அமைச்சர் பொறுப்பைத் திறம்பட வகித்த பொருளாதார மேதை. பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்தார்.
குடியரசுத் துணைத்தலைவர், இந்தியக் குடியரசின் தலைவர் என்ற உயர்பொறுப்புகளை வகித்து, இந்திய அரசியலுக்கு, இந்திய நாட்டின் பொதுவாழ்வுக்குப் பெருமை சேர்த்தவர்.
மாநிலங்களவையின் தலைவராக இருந்தபோது, அவையைத் திறமையாக நடத்தினார். தன்னை விமர்சிப்பவர்களிடத்திலும், அன்பும் மதிப்பும் காட்டுகின்ற உயர்ந்த பண்பாளராகத் திகழ்ந்தார். அவரிடம் மிகுந்த மதிப்புக் கொண்டு உள்ள என்னிடத்தில், தனிப்பட்ட முறையில் அன்பு காட்டி வந்தார்.
தான் வகித்த பொறுப்புகளுக்குப் பெருமை சேர்த்து, இந்தியாவின் ஜனநாயகம் தழைக்கப் பாடுபட்ட ஆர்.வி. அவர்களுடைய மறைவு, ஒரு பேரிழப்பு ஆகும். அவரது மறைவால் துயருறும் குடும்பத்தாருக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

