தமிழக மாணவர்கள் ஐதராபாத்தில் தாக்கப்பட்டதற்கு வைகோ கடும் கண்டனம்
விவகாரங்கள்: மனித உரிமை, தேசிய
மாவட்டம்: தமிழ்நாடு, பிற மாநிலங்கள்
செய்தித்துறை: பத்திரிகை அறிக்கைகள்
தமிழக மாணவர்கள் ஐதராபாத்தில் தாக்கப்பட்டதற்கு
வைகோ கடும் கண்டனம்
ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில் மத்திய அரசு நிறுவனமான, பெல் நிறுவனம் பணியிடங்களுக்கு நடத்திய எழுத்துத் தேர்வில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து சென்ற, தமிழக இளைஞர்கள் தங்கள் திறமையால் 60 % மேல் வெற்றிபெற்ற நிலையில், அடுத்து நடைபெற இருந்த நேர்முகத் தேர்வை எதிர்நோக்கி இருந்த சூழலில், தெலுங்கானா வெறியர்கள் தமிழக இளைஞர்களை பயங்கரமாகத் தாக்கி உள்ளனர். அதில் பலர் காயம் அடைந்து உள்ளனர். அங்கிருந்து தப்பியோடி வந்தவர்கள் தமிழகக் காவல்துறையிடம் புகார் கொடுத்து இருக்கின்றனர். தேர்வு எழுதிய இளைஞர்களில் பலர் இன்னும் ஐதராபாத்தில் இருந்து திரும்பவில்லை.
இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, அவர்கள் மீது உரிய நடவடிக்கையை ஆந்திர மாநில அரசும் காவல்துறையும் மேற்கொள்வதற்கு தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.
பெல் நிறுவன நேர்முகத் தேர்வை நடத்துவதற்கும், அதில் தமிழக இளைஞர்கள் பாதுகாப்பாக பங்கேற்பதற்கும், தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
மத்திய அரசு நிறுவனத்தின் தேர்வில் கலந்துகொண்ட தமிழக இளைஞர்கள்மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதால், மத்திய அரசின் கவனத்துக்கும், தமிழக அரசு கொண்டு சென்று நேர்முகத் தேர்வை பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கும், தமிழக இளைஞர்கள் கலந்து கொள்ளவும் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

