மாமல்லபுரம் : மார்ச் 2 இல் பட்டா வழங்கக்கோரி, பொதுமக்கள் சார்பில் நடைபெறும் உண்ணாநிலை அறப்போரில் ம.தி.மு.க. பங்கேற்பு!
விவகாரங்கள்: வறுமை, புறநகர்
மாவட்டம்: காஞ்சிபுரம், தமிழ்நாடு
செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்
மாமல்லபுரம் : மார்ச் 2 இல் பட்டா வழங்கக்கோரி, பொதுமக்கள் சார்பில் நடைபெறும் உண்ணாநிலை அறப்போரில் ம.தி.மு.க. பங்கேற்பு!
காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் தாலுகா, மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி, 13 ஆவது வார்டு, அண்ணாநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களும், சுமார் 350 குடும்ப அட்டைதாரர்களும் அனைத்து சாதி, மதத்தினரும் ஒற்றுமையுடன் கடந்த 50 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இப்பகுதி புல எண். 160/ 2 கிராம நத்தமாக இருந்து வருகிறது. இப்பகுதிக்கு பட்டாகோரி பல ஆண்டுகள் முயற்சித்தும், மத்திய தொல்பொருள் துறையினர் தங்களுக்கு சம்மந்தம் இல்லாத இடத்திற்கு ஆட்சேபனை தெரிவித்ததன் காரணமாக இப்பகுதிக்கு பட்டா வழங்குவது கைவிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தொல்பொருள் ஆய்வுத்துறையினர் பாதுகாக்கப்பட வேண்டிய அனைத்து இடங்களுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் மதில் சுவர் எழுப்பி வேலி அமைத்துக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது. எனவே, அரசு புறம்போக்கு நிலத்தில் 3 ஆண்டுகள் குடியிருந்தால் பட்டா வழங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ள நிலையில், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற முதுமொழிக்கு இலக்கணமாக ஜாதி, மத எல்லைகளைக் கடந்து ஒரு கூட்டுப்பறவைகளாக, ஒரு தாயின் பிள்ளைகளாக ஒற்றுமையுடன் சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்துவரும் அண்ணாநகர் பகுதிக்கு பட்டா வழங்கிட தமிழக அரசை வலியுறுத்தி மார்ச் 2 ஆம் தேதி மாமல்லபுரம் கிழக்கு ராஜ வீதியில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு, அப்பகுதி மக்கள் உண்ணாநிலை அறப்போர் மேற்கொள்கின்றனர்.
இந்த உண்ணாநிலை அறப்போரில் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா அவர்களும், கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினரும், காஞ்சி மாவட்டச் செயலாளருமான பாலவாக்கம் சோமு அவர்களும் பங்கேற்கின்றனர்.

