பொங்கல் வாழ்த்து ! வைகோ
விவகாரங்கள்: விவசாயம், தேசிய, புறநகர்
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்
பொங்கல் வாழ்த்து ! வைகோ
தலைமுறை தலைமுறையாகத் தமிழர்கள் கொண்டாடி வரும் இனிய விழாதான் தைப் பொங்கல் விழா ஆகும். இது இயற்கைக்கு நன்றியும், உழைப்புக்கு உயர்வும் தந்து, உலக மக்களை வாழ வைக்கும் உழுதொழில் வேளாண்மைக்கு மகுடம் சூட்டும் விழா ஆகும்.
கரும்பும் சர்க்கரைப் பொங்கலும் தமிழர் திருநாளில் நாவுக்குச் சுவை தரும் என்றாலும், நம் இதயத்தில் இனிப்பு இல்லை; உப்புக் கரிக்கிறது, நெஞ்சில் வடிந்த கண்ணீரால்!
கடந்த ஆண்டில்தான் இலங்கைத் தீவில் நம் தமிழ் இனம் கொலைக்களத்தில் வதைபட்டது. சிங்களக் கொடியோர் நடத்திய கோரத் தாக்குதலில் நம் தொப்பூழ்கொடி உறவுகள் பலியான பெரும் துயர் நேர்ந்தது. முள்வேலி முகாம் மட்டும் அன்றி, தங்கள் உரிமை மண்ணிலும் தமிழர்கள் துன்பத்தில் துடிக்கின்றனர். அவர்கள் வேதனை நீங்கி உரிமை வாழ்வு பூக்கவும், சுதந்திரத் தமிழ் ஈழம் மலரவும் உறுதி கொண்டு பணியாற்ற இப்பொங்கல் திருநாளில் சூளுரைப்போம்.
தமிழகத்தில், முல்லைப்பெரியாறு உள்ளிட்ட நதிகளின் வாழ்வாதாரங்களுக்கு ஆபத்து நேர்ந்து உள்ளது. இந்த அறைகூவல்களை எதிர்கொண்டு தமிழகத்தின் உரிமைகளைக் காக்கவும், விவசாயிகளின் அல்லல்களைப் போக்க உரிய கடமை ஆற்றவும், இந்தத் தைப் பொங்கல் நாளில் உறுதி கொள்வோம்.
தமிழர்களின் பண்பாட்டுக்கும் பழமையான கலாச்சாரத்துக்கும் எதிரான தீங்கான போக்கு வளரும் நிலை அகற்றப் பாடுபடுவோம்.
தமிழக மக்கள் நலனுடன், மகிழ்வுடன், ஒற்றுமையுடன் வாழவும், தைத் திருநாளில் தங்கள் வீடுகளில் பொங்கலைக் கொண்டாடவும் எனது இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

