நாட்டின் எதிர்காலங்களான குழந்தைகளின் உயிர்காக்கும் போலியோ சொட்டு மருந்து போலியா? வைகோ அறிக்கை
விவகாரங்கள்: மருத்துவம், தேசிய
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்
நாட்டின் எதிர்காலங்களான குழந்தைகளின் உயிர்காக்கும்
போலியோ சொட்டு மருந்து போலியா?
வைகோ அறிக்கை
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளான நேற்று (23.01.2011 அன்று) நாடு தழுவிய 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இளம்பிள்ளை வாதம் தடுப்பு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது. இதில், காஞ்சிபுரம் மாவட்டம் - குன்றத்தூர் ஒன்றியம், படப்பை பெரியார் நகரைச் சேர்ந்த அருள்-தனலட்சுமி தம்பதியரின் 2 வயது குழந்தை ஜோஸ்வாவுக்குக் காலை 8 மணி அளவில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் குழந்தைக்குச் சோர்வும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தாய் தனலட்சுமி குழந்தை ஜோஸ்வாவை படப்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று காட்டியபோது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. உடனடியாக காவல்துறை மூலமாகக் குழந்தையைக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று விட்டனர்.
அதேபோன்று, பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த அபில் - ரெளலத்தின் 3 வயதுக் குழந்தை ஜலாலுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டவுடன் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு சோர்வு அடைந்ததால், அக்குழந்தைக்கும் தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று, மாமல்லபுரம் அடுத்த எடையூர் மீனவர் பகுதியில், போலியோ சொட்டு மருந்து போடப்பட்ட 15 குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகி மயங்கிய நிலையில் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். 13 குழந்தைகள் வீடு திரும்பிய நிலையில், வெங்கடேசன்-நதியா தம்பதியரின் 2 வயது பெண் குழந்தை சுபர்ணா; மயில்சாமி-சிவகாமி தம்பதியரின் இரண்டரை வயது ஆண் குழந்தை கிஷோர் ஆகியோர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கு சுகாதாரத் துறையின் சார்பில் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுவது, தங்களின் பொறுப்பை உணராமல் பிரச்சினையைத் திசைதிருப்பும் செயலாக உள்ளது. இறந்த குழந்தை ஜோஸ்வாவும், சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக இருந்த குழந்தைகள்தான். போலியோ சொட்டு மருந்து போடப்பட்டதால்தான் இக்குழந்தைகளுக்கு இந்த நிலை உருவாகி இருக்கிறது. சம்பந்தப்பட்ட இரண்டு முகாம்களில் போடப்பட்ட சொட்டு மருந்துகள் முறையாகப் பாதுகாக்கப்படாமல் இருந்திருக்க வேண்டும். அல்லது காலாவதியாகி இருக்க வேண்டும். இல்லையென்றால் தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி ஆட்சியில் போலிகளின் அரங்கேற்றம் போலியோ சொட்டு மருந்து போலியாக இருந்திருக்க வேண்டும். இரண்டு நாள்களுக்கு முன்கூட போலி மருந்து விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டதை மறுக்க முடியாது.
இந்த அசாதாரணமான சூழ்நிலையில், போலியோ சொட்டு மருந்து போடப்பட்ட குழந்தைகளைப் பெற்றோர் தூக்கிக் கொண்டு மருத்துவமனையில் சாரை சாரையாக நின்று பரிசோதித்தது இந்த ஆட்சியின்மீது உள்ள நம்பிக்கையின்மையைக் காட்டுகிறது. ஒவ்வொரு மருந்திலும் இந்த மருந்து பிராணிகள் மீது (எலி, பூனை, முயல், குரங்கு) பரிசோதிக்கப்படாதது என்ற வாசகம் இருக்க வேண்டும் என்பது ஜீவகாருண்யம் நியதி. ஆனால், கருணாநிதி ஆட்சியில் நாட்டின் எதிர்காலங்களான குழந்தைகள் மீது இப்போது பரிசோதித்துப் பார்க்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
எனவே, அரசு, சம்பந்தப்பட்ட பெற்றோரைக் காவல்துறை மூலமாகவும், தன் கட்சியினராலும் மிரட்டி காரணம் காரியங்களைத் திசை திருப்புவதற்கு முன் கடந்த ஆண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதை மறந்திடாமல் இனியும் இது தொடராமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம். இளம்தளிர் ஜோஸ்வாவைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர்க்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்; சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
‘தாயகம்’ வைகோ
சென்னை-8 பொதுச்செயலாளர்
24.01.2011 மறுமலர்ச்சி தி.மு.க.

