பென்னி குயிக் மணிமண்டபம் வைகோ வரவேற்பு
செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்
மாவட்டம்: தமிழ்நாடு
பென்னி குயிக் மணிமண்டபம்
வைகோ வரவேற்பு
தென்தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களுள் மிக முக்கியமான ஒன்றான முல்லைப்பெரியாறு அணையை அற்புதமாக அமைத்துத் தந்த இங்கிலாந்து நாட்டின் பொறியாளர் பென்னி குயிக், தமிழக மக்கள் என்றென்றும் நன்றி கூறுகின்ற மகத்தான மனிதர் ஆவார்.
அந்த உத்தமரின் பிறந்தநாள், ஜனவரி 15 ஆகும். முல்லைப்பெரியாறு தண்ணீரால் வாழ்வு பெறும் பல கிராமங்களில், அந்த நாளை, பொங்கல் திருநாளாக ஏற்கனவே கொண்டாடுகின்றார்கள்.
முல்லைப்பெரியாறு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து, ஒட்டுமொத்தத் தமிழகமும் கேரள அரசின், அரசியல் கட்சிகளின் அக்கிரமப் போக்கை எதிர்த்து, கட்சி, சாதி, மத எல்லைகளைக் கடந்து, நம் உரிமை காக்க, கிளர்ந்து எழுந்து விட்ட இன்றையச் சூழலில் இந்த ஆண்டு தைப்பொங்கல், பென்னி குயிக் பிறந்த நாளான ஜனவரி 15 இல் அமைந்து இருப்பது, இயற்கையாகவே மனதுக்கு மகிழ்ச்சியையும், உறுதியையும் தருகின்றது.
நெடுங்காலமாகத் தமிழர்கள் கொண்டாடி வருகின்ற திருவிழாவான பொங்கல் விழாவில், நெல், கரும்பு, முந்திரி, தானியங்கள், காய்கறிகள், பழங்கள் அனைத்தையும் விளைவிக்கும் பூமிக்கும், உழவர்களுக்கு உதவிடும் எருதுகள், பசுக்களுக்கும் நன்றி தெரிவித்துப் படையல் இடுவது நமது வழக்கம். எனவே, இந்த ஆண்டு தைப்பொங்கலை, மாமனிதர் பென்னி குயிக்குக்கு நன்றி கூறும் விழாவாக ஆங்காங்கு அவரது திரு உருவப் படங்களுக்கு மாலை சூட்டி, மலர்கள் தூவி, நன்றி காட்ட வேண்டுகிறேன்.
பொறியாளர் பென்னி குயிக், தமிழகத்துக்கு ஆற்றிய அருந்தொண்டுக்கு, பெருமை சேர்க்கும் விதத்தில், தமிழக அரசு, அப்பெருமகனுக்கு மணிமண்டபமும், சிலையும் எழுப்ப முடிவு எடுத்து இருப்பது, பாராட்டுக்கு உரியது ஆகும்.
இன்னும் எத்தனை நூறாண்டுகள் ஆனாலும், பென்னி குயிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணையில், கேரளம் சேதம் விளைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்; புதிய அணை எனும்அவர்களின் வஞ்சகத் திட்டத்தை ஏற்க மாட்டோம் என்று, மத்திய அரசுக்கும், கேரளத்துக்கும் தமிழகத்தின் உறுதியை பிரகடனம் செய்யும் விதத்தில், இந்த மணிமண்டபம் நமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கிறது.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
09.01.2012 மறுமலர்ச்சி தி.மு.க

