கேரள ஆளுநர் ஃபரூக் மரைக்காயர் மறைவு வைகோ இரங்கல்
விவகாரங்கள்: சுற்றுச்சூழல், அரசியல்
மாவட்டம்: தமிழ்நாடு, பிற மாநிலங்கள்
செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்
கேரள ஆளுநர் ஃபரூக் மரைக்காயர் மறைவு
வைகோ இரங்கல்
கேரள ஆளுநர் மாண்புமிகு ஃபரூக் மரைக்காயர் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிக்க அதிர்ச்சியும்,வேதனையும் அடைந்தேன். புதுவை மாநில முதலமைச்சராக மூன்று முறை பதவி வகித்தவரும், மத்திய அமைச்சராக பணியாற்றியவருமான ஃபரூக் மரைக்காயர் அவர்கள் கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரிடமும் அன்பு பாராட்டி பழகுகின்ற உயர்ந்த பண்பாளர் ஆவார். தலைசிறந்த மனிதாபிமானியாகவும் திகழ்ந்தார்.
புதுச்சேரி பிரஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற மாணவர் பருவத்திலேயே போராடியவர் ஆவார். தமிழகத்திலும், புதுவையிலும் வாழுகின்ற தமிழர்களின் உரிமைகளிலும், நலனிலும் அளவற்ற அக்கறை காட்டி வந்தார்.
நான் சந்திக்கும்போதெல்லாம் ஈழத்தமிழர்களின் நலனைப் பற்றியே மிகுந்த கவலையோடு உரையாற்றுவார். செளதி அரேபியாவில் அவர் இந்தியத் தூதுவராகப் பணியாற்றியபோது, அங்குள்ள தமிழர்களுக்கு பெரும் துணையாக சேவை செய்தார்.
தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டபோதெல்லாம் அதைப் போக்குவதற்கு மிகவும் துரிதமாக உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆரோக்கியமான அரசியலுக்கும், நாகரிகத்திற்கும் இலக்கணமாக திகழ்ந்த உன்னதமான மனிதநேய உத்தமராம்.
பரூக் மரைக்காயரை இழந்து தவிக்கும் அன்னாரது குடும்பத்திற்கும், உற்றார் உறவினர்களுக்கும் அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் இயக்கத்திற்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
27.01.2012 மறுமலர்ச்சி தி.மு.க

