நாகை - திருவாரூர் மாவட்டங்களில் அகல ரயில் பாதைப் பணிகளை உடனே நிறைவேற்றுக! வைகோ கோரிக்கை!
விவகாரங்கள்: மனித உரிமை
மாவட்டம்: நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருவாரூர்
செய்தித்துறை: தொகுப்புகள், கடிதங்கள், தலைப்பு செய்திகள்
27 ஜனவரி 2012
நாகை - திருவாரூர் மாவட்டங்களில்
அகல ரயில் பாதைப் பணிகளை உடனே நிறைவேற்றுக!
வைகோ கோரிக்கை!
ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டு, நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த சென்னை -காரைக்குடி-இராமேஸ்வரம் தொடர்வண்டித் தடத்தில், போட் மெயில் என்று ஒரு தொடர்வண்டி இயங்கி வந்தது. பின்னர், அதன் பெயர் மனோரா எக்ஸ்பிரஸ் என்று மாற்றம் பெற்றது. அதற்குப் பின்னர், கம்பன் எக்ஸ்பிரஸ் எனப் பெயர் சூட்டப்பட்டு, ஏ.பி. என இரண்டு தொடர்வண்டிகள் இயக்கப்பட்டு வந்தன.
இதனால், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி பகுதி வாழ் மக்கள் பயன்பெற்று வந்தனர்.
இந்தத் தடத்தை, அகல ரயில் பாதையாக மாற்றப்போவதாக அறிவித்து, இந்தத் தொடர்வண்டிகள் நிறுத்தப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. திருவாரூர்-காரைக்குடி தொடர்வண்டி மட்டும், மீட்டர்கேஜ் பாதையில் இயக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் இதர பகுதிகளில் உள்ள மீட்டர்கேஜ் வழிகள் அனைத்தும் அகன்ற வழியாக மாற்றப்பட்டு விட்ட பின்னரும், திருவாரூர்-காரைக்குடி தடம் மட்டும், இன்னமும் மீட்டர்கேஜ் வழியாகவே உள்ளது.
அண்மையில் தொடர்வண்டித் துறை அளித்து உள்ள தகவலின்படி, இந்தப் பணி, இன்னமும் திட்ட மதிப்பீடு என்ற நிலையில்தான் உள்ளதாகத் தெரிகிறது. ஆகவே, குறைந்தது இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பாதை மாற்றப்படாது என்றும்; இந்தப் பாதை வரவே வராது என்றும், அப்படியே வந்தாலும், சரக்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் சொல்வதாகத் தெரிகிறது.
இதற்கு இடையில், மீட்டர்கேஜ் வழித்தடத்தில் தற்போது ஓடிக்கொண்டு இருக்கின்ற தொடர்வண்டியையும், இப்போதே நிறுத்துவதற்குத் திட்டமிட்டு வருகிறார்கள்.
வேதாரண்யம், அகஸ்தியன்பள்ளி ஆகியவற்றில் இருந்து உப்பு ஏற்றுமதி மூலம், தொடர்வண்டித்துறைக்கு நல்ல வருமானம் கிடைத்து வந்தது. இப்போது, திருத்துறைப்பூண்டி, அகஸ்தியம்பள்ளி தடம் மூடப்பட்டு விட்டதால், லாரிகள் மூலமாக உப்பு கொண்டு செல்லப்படுகிறது. இதனால், சாலைகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு, சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு ஏற்பட்டு உள்ளது; இப்பகுதியில் வளர்ச்சிப் பணிகளும் தடைப்பட்டு உள்ளன. மக்கள் போராட்டங்களை நடத்துகின்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே, தொடர்வண்டித்துறையினர், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, காரைக்குடி வழித்தடத்தை, அகல ரயில்பாதையாக மாற்றிட, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; அந்தப் பணிகள் துவங்கும் வரையிலும், தற்போது ஓடிக்கொண்டு இருக்கின்ற திருவாரூர்-காரைக்குடி தொடர்வண்டியை நிறுத்தக்கூடாது; அகல வழிப்பாதைப் பணிகளைத் திருவாரூரில் இருந்து தொடங்குவதுடன், வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளித் தடங்களையும் அகல வழியாக மாற்றிட வேண்டும் என, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
27.01.2012 மறுமலர்ச்சி தி.மு.க

