ஆசிரியர் பணியிடங்களைப் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்க! வைகோ அறிக்கை
விவகாரங்கள்: கல்வி, மனித உரிமை
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்
ஆசிரியர் பணியிடங்களைப்
பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்க!
வைகோ அறிக்கை
தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 25,000 பி.எட்., பட்டதாரிகள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து ஆசிரியர் பணிக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலும் கிராமப்புறத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
தங்களின் பட்டப் படிப்புக்காக மூதாதையர்களின் நிலங்களையும், உடமைகளையும் விற்றும், கடன் வாங்கியும் பல சிரமங்களுக்கு மத்தியில் ஏழ்மையான நிலையிலும் திறமையினால் பட்டதாரி ஆசிரியர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தங்கள் பெற்றோரையும், குடும்பத்தினரையும் காக்க வேண்டிய பொறுப்பும் நாட்டின் எதிர்காலங்களான மாணவர்களை உருவாக்க வேண்டிய சமூகக் கடமையும் உள்ளது.
எனவே, இவர்களை முன்னுரிமை அடிப்படையில் தமிழக அரசு கல்வி மானிய கோரிக்கையில் அறிவித்துள்ள சுமார் 15,000 ஆசிரியர் பணியிடங்களையும், 3,600 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் நடப்பாண்டில் நியமனம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளதில் இவர்களுக்குப் பணி நியமனம் வழங்கிட வேண்டும். தமிழக அரசு நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இரட்டை முறைத் தேர்வு முறையான தகுதித் தேர்வு மற்றும் போட்டித் தேர்வை ரத்து செய்தோ அல்லது பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் அனைவருக்கும் பணியாணை வழங்கிய பிறகு பின்தேதியிட்டு அறிஞர் பெருமக்களின் ஆய்வுக்குப் பின் நடைமுறைப்படுத்தலாம்.
கடந்த ஆட்சியில் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்தனர் என்பதற்காக அதை இந்த ஆட்சி ரத்து செய்வது மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சிக்கு முறையல்ல. எனவே, தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையைத் தமிழக அரசு கனிவுடன் பரிசீலித்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றிட வேண்டுகிறேன்.
தாயகம் வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
22.01.2012 மறுமலர்ச்சி தி.மு.க.,

