மாலா ஜெயராமையா மறைவு .வைகோ இரங்கல்
செய்தித்துறை: பத்திரிகை அறிக்கைகள்
மாவட்டம்: தமிழ்நாடு
மாலா ஜெயராமையா மறைவு
வைகோ இரங்கல்
தினத்தந்தி நாளிதழின் அதிபரும், இந்திய விளையாட்டுத் துறைக்கு ஊக்கமளிக்கும் சிகரமாய் திகழுகின்றவருமான மனிதநேயர் சிவந்தி ஆதித்தனார் அவர்களின் அருமைப் புதல்வி திருமதி மாலா ஜெயராமையா அவர்கள், மகளிர் குழுவினருடன் ருஷ்யா நாட்டுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருந்தபோது, அங்கு கொடிய அனல் வெப்பத்தால் திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிர் நீத்தார்கள் என்ற துன்ப செய்திகேட்டு, கடும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளானேன்.
திடீரென்று இடியென அந்தச் சகோதரியைத் தாக்கிய மரணச் செய்தியைக் கேள்விப்படும் நமக்கே இவ்வளவு அதிர்ச்சி அளிக்கிறது எனில், அன்பு மகளை இழந்துள்ள, ஐயா சிவந்தி ஆதித்தனார் அவர்களையும் அவரது குடும்பத்தினரையும் நிலைகுலையச் செய்து எவ்வளவு எல்லையற்ற துயரத்தில் ஆழ்த்தியிருக்கும் என்பதை நினைக்கும்போதே மிக்க வேதனை அடைகிறேன். துன்பக் கண்ணீரில் தவிக்கும் சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

