வைகோ அறிக்கை
விவகாரங்கள்: சுற்றுச்சூழல்
மாவட்டம்: திருநெல்வேலி - மாநகர், திருநெல்வேலி - புறநகர், தமிழ்நாடு
செய்தித்துறை: பத்திரிகை அறிக்கைகள்
வைகோ அறிக்கை
திருநெல்வேலி மாவட்டம், நெல்லை மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ள இராமையன்பட்டி கிராமத்திற்கு மேற்கே மாநகராட்சியின் கழிவுகள் பல ஆண்டுகளாக பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கொட்டப்பட்டு வருகின்றன.
இக் கழிவுக் கிடங்கில் ஜூலை 27 அன்று ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக, கடுமையான புகை மூட்டம் உருவாகி இராமையன்பட்டி, தச்சநல்லூர் தொடங்கி கேடிசி நகர்வரை உள்ள பகுதி முழுவதும் புகைமண்டலமாக விளங்குகிறது. ஆறு நாட்கள் ஆகியும் புகையின் தாக்கம் குறையவில்லை. வீடுகளுக்குள் புகை மண்டுவதால், மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. குழந்தைகள் தூங்க முடியவில்லை. கர்ப்பிணிப் பெண்களும், முதியவர்களும் தாங்க முடியாத துன்பத்துக்கு ஆளாகித் தவிக்கிறார்கள். மூச்சுத் திணறல் காரணமாக நல்ல திடகாத்திரமாக இருந்த சுமார் 70 வயது மதிப்புடைய முத்தாட்சி அம்மாள் இறந்துள்ளார்.
பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆபத்தை விளைவிக்கக்கூடிய பெரும் புகை வருவதைக் கட்டுப்படுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய, கழிவுகளைக் கொட்டிய, மாநகராட்சி தூங்கி வழிகிறதோ என்ற ஐயம் பொதுமக்களுக்கு எழுகிறது.
கழிவுகளில் எழும் புகையில் நச்சு கலந்திருக்க வாய்ப்பு உள்ளதால் பெரும் அபாயம் நேருமோ என்ற அச்சமும், பீதியும் பொதுமக்களிடம் நிலவுகிறது. எனவே முழுமையான புகையைக் கட்டுப்படுத்திட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இறந்து போன மூதாட்டியின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் நட்ட ஈடும் புகையினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ள குடும்பத்தினருக்கு நிவாரண உதவியும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
பொதுமக்கள் விருப்பத்திற்கு இணங்க இக் கழிவுக் கிடங்கை அப்புறப்படுத்தி, பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத பகுதியில் அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

