இயக்குநர் சீமான் கைது: வைகோ கண்டனம்!
விவகாரங்கள்: மனித உரிமை, சர்வதேசம், இலங்கைத் தமிழர்
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்
இயக்குநர் சீமான் கைது: வைகோ கண்டனம்!
சர்வாதிகார இருள் தமிழகத்தைச் சூழ்ந்து வருகிறது. ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்க, மைனாரிட்டி தி.மு.க. அரசு, அடக்குமுறையை ஏவுகிறது. கருத்து உரிமையைக் காலில் போட்டு மிதிக்கிறது.
சர்வதேச போர்க்குற்றவாளியாகத் தண்டிக்கப்பட வேண்டிய கொலைகாரன் ராஜபக்சே கூட்டத்தை, சிங்கள இனவெறிக் கொடியோரின் அராஜகத்தைப் பற்றிப் பேசும் உரிமையைக் கூட அனுமதிக்காமல், வாய்ப்பூட்டுச் சட்டம் போட கருணாதி அரசு திட்டமிடுகிறது.
ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள அரசு, கடற்படையை ஏவி தமிழக மீனவர்களையும் சுட்டுக் கொல்லும் கொடுமையைக் கண்டித்து, ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் தலைவர் இயக்குநர் சீமான் பேசியதற்காக, காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து, அவரைக் கைது செய்து உள்ளனர்.
தமிழர்களை இரத்த வேட்டையாடிய ராஜபக்சேவுக்கு இரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்றுக் கொண்டாடிய தமிழர் விரோத இந்திய அரசில் இடம் பெற்று உள்ள தி.மு.கழகத்தின் தலைவர், தமிழகத்தின் முதல்வர் கருணாநிதி, ‘இலங்கை அரசுக்கு எதிராகப் பேசினால், சட்டம் ஒழுங்கு தன் கடமையைச் செய்யும்’ என தன் அமைச்சரை விட்டுப் பூச்சாண்டி காட்டுகிறார். தமிழ்நாட்டில், இலங்கை அரசைப் பற்றியே பேசக்கூடாதாம். அப்படிப் பேசுவோரைச் சிறையில் தள்ள, புதிய சட்டமும் கொண்டு வருவாராம்.
தங்கள் உயிர்களையே தீயில் கருக்கிக் கொள்ளும் முத்துக்குமார்களைத் தந்த தமிழ்நாட்டில், இத்தகைய மிரட்டல் அடக்குமுறைச் சட்டங்களை, மான உணர்வு உள்ள தமிழர்கள் கால் தூசாகவே கருதுவோம்.
இயக்குநர் சீமான் அவர்கள், பத்திரிகையாளர்கள் சங்கத்தில் தன் கருத்தைக் கூறுவதற்கும் அனுமதிக்காத காவல்துறை, பத்திரிகையாளர்களையும் தாக்கி உள்ளது.
இயக்குநர் சீமானைக் கைது செய்ததை வன்மையாகக் கண்டிப்பதோடு, கருத்து உரிமையை ஒடுக்க, அடக்குமுறையை ஏவுகின்ற தி.மு.க. அரசை எதிர்த்துப் போராடுவதற்கு, ஜனநாயக சக்திகள் ஆர்த்து எழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.