பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு! ம.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!
விவகாரங்கள்: பொருளாதாரம், திறன், விவசாயம், வறுமை, புறநகர்
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்
பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு!
ம.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!
பெட்ரோல், டீசல், மண் எண்ணெய், சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு உயர்த்தியதால், ஏற்கனவே நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி ஏற்றம் மேலும் கடுமையாக அதிகரித்து உள்ளது. அனைத்துப் பண்டங்களின் விலையும் மிகவும் உயர்ந்து உள்ளதால், நடுத்தர மக்களும், அடித்தட்டு மக்களும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அன்றாடங்காய்ச்சிகளும், மாத வருவாயை நம்பி வாழும் மக்களும், தாங்க முடியாத அல்லலுக்கு ஆட்பட்டு உள்ளனர். சமையல் எரிவாயு விலையைக் கூட்டியதால், குடும்பச் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் தாய்மார்கள் துயர்படுகின்றனர்.
மத்திய அரசு தொடர்ந்து கடைபிடித்து வருகின்ற மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து, விலைவாசி உயர்வைக் கண்டித்து,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஜூலை 1 - ஆம் தேதி காலை 11 மணி அளவில், பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், சென்னை துறைமுகம் எதிரில் உள்ள, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
கழகத் தோழர்களும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

