ஒப்பந்தங்கள் அல்ல; எரிக்கும் தீப்பந்தங்கள்!

விவகாரங்கள்: மனித உரிமை, சர்வதேசம், இலங்கைத் தமிழர்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள்

Date: 
Sat, 12/06/2010

ஒப்பந்தங்கள் அல்ல;
எரிக்கும் தீப்பந்தங்கள்!

ஈழத்தமிழ் இனத்தை நிரந்தர அடிமை இருளில் நசுக்கத் திட்டமிட்டு உள்ள கொடியவன் ராஜபக்சே, தில்லியில் குரூரச் சிரிப்புடன், இந்தியத் தலைநகர் தில்லியில் பவனி வருகிறான்.


குடியரசுத் தலைவர் மாளிகையில் அவனுக்குக் கோலாகல வரவேற்பு, அணிவகுப்பு மரியாதை! இந்தியப் பிரதமரும், குடியரசுத் தலைவரும், இருகரம் கூப்பி வரவேற்றுப் பாராட்டு.


இலட்சக்கணக்கான தமிழ் மக்களை, ஈவு இரக்கம் இன்றி கொன்று குவித்த கொடியவன் எக்காளமிட்டவாறு பார்வையை வீசுவதும், திமிராக நடப்பதும், ஜன்பத் தெரு 10 ஆம் எண் வீட்டில், சோனியா காந்தியுடன், கெந்தலிப்புடன் உரையாடுவதும், ஒரு உண்மையை நன்றாக உணர்த்துகிறது.


விடுதலைப்புலிகளை எதிர்க்கும் யுத்தம் என்று சொல்லிக்கொண்டே இலட்சக்கணக்கான தமிழர்களையும் அழித்த போரை, இயக்கியதும், நடத்தியதும் இந்திய அரசுதான் என்பதால், அதைக் கொண்டாடுவதற்காவே இந்தியா வந்து உள்ளான்.


ஈழத்தமிழர்களைக் காலில் போட்டு நசுக்கவும், உரிமைப் போராட்டத்தைத் தடுக்கவும், ராஜபக்சே கேட்டதையெல்லாம் அள்ளித் தந்து விட்டது இந்திய அரசு. ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாம். சிங்கள அரசுடன், தில்லி போட்ட ஒப்பந்தங்கள். தில்லி ராஜகட்டத்தில் காந்தியார் கல்லறையில், ‘ஏழு பாவங்கள்’ என்று எழுதப்பட்டு இருக்கிறது. அத்தகைய பாவச் செயல்களை, இந்திய அரசு செய்து உள்ளது.


‘இந்திய-இலங்கை இராணுவக் கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகப் போகிறது’ என்று, 2004 நவம்பர் 7 இல், ஏடுகளில் செய்திகள் வெளியானபோது, பதறித் துடித்த நான், நவம்பர் 10 ஆம் நாள் அன்று, ‘ஒப்பந்தம் போடாதீர்; துரோகம் இழைக்காதீர்’ என்று பிரதமரிடம் நேரில் மன்றாடினேன். ‘ஒப்பந்தம் செய்ய மாட்டோம்’ என்றார். ஆனால், கையெழுத்து இடாமலேயே ஒப்பந்தத்தின் சரத்துகளை, இந்திய அரசு நிறைவேற்றிய சதிச்செயல், அதற்கு அடுத்த ஆண்டு வெளியானது.


பலாலி விமான தளத்தை, இந்திய விமானப்படை பழுதுபார்த்துக் கொடுத்தது. தமிழர்களைக் கொன்று குவித்த குண்டு வீச்சுக்கு, இந்தியாவே வழி அமைத்தது. இப்போது, மீண்டும் பலாலி விமான தளத்தையும், காங்கேசன்துறை துறைமுகத்தையும் நவீனப்படுத்த இந்தியா ஏற்பாடு செய்கிறது.


இலங்கை இராணுவத்துக்கும், காவல்துறைக்கும், அனைத்து உதவிகளும் செய்ய இந்தியா ஒப்புக் கொண்டு உள்ளது. சிங்கள இராணுவத்தினருக்கும், காவல்துறைக்கும், இந்தியாவில் நவீனப் பயிற்சிகள் ஏற்பாடு ஆகின்றன.


ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்தில், ஜெனீவா நெறிகளை மண்ணில் புதைத்தது சிங்கள அரசு. போரில் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள், இளம்பெண்களை அம்மணமாக்கி, அந்த உடல்களை வீதிவீதியாக இழுத்துச் சென்று, அந்த உயிர் அற்ற சடலங்களைச் செருப்பால் அடித்தும், காலால் மிதித்தும், கோர நர்த்தனம் ஆடினர் சிங்களக் கொடியோர்.


தமிழ் இளைஞர்களின் கண்களையும், கைகளையும் கட்டி அம்மணமாக்கி, உச்சந்தலையில் சுட்டுக் கொன்ற கொடுமையும், மறுக்க முடியாத ஆவணப் படங்களாக வெளிப்பட்டு விட்டது. ஈழத்தமிழ்ப் பெண்களை மிகக் கொடூரமாகக் கற்பழித்துக் கொன்று எரித்த கோர நிகழ்ச்சிகளை நினைக்கும்போதே நெஞ்சை அடைக்கிறது.


இத்தகைய சிங்கள இராணுவத்துக்கும், காவல்துறைக்கும்தான் இந்தியாவில் நவீனப் பயிற்சிகளாம்!


இலங்கையில் மின்சார உற்பத்தி ஆயிரம் கோடி ரூபாயும், ரயில்வே உள்ளிட்ட மற்ற திட்டங்களுக்கு 4000 கோடி ரூபாயும் கொடுக்க, இந்தியா ஒப்புக் கொண்டு உள்ளது. ஏற்கனவே, ரடார்கள் உள்ளிட்ட ஆயுதங்களையும், ஆயிரம் கோடி ரூபாயையும் இந்தியா கொடுத்து இருக்கிறது.


தமிழ் இனத்தைப் பூண்டோடு அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் கொலைகாரனுக்கு இப்பொழுது, மேலும் 5000 கோடி ரூபாயைக் கொடுப்பது, ஈழத்தமிழர்களுக்கு மட்டும் அல்ல, தமிழகத்துக்கும், இந்தியாவுக்குமே எதிர்காலத்தில் பெருங்கேடாக முடியும்.


இலங்கையில், ஈழத்தமிழர்களின் பண்பாடு, கலாச்சார அடையாளங்களே இல்லாமல் அழித்து ஒழிக்கும் செயல்கள் தீவிரமாக நடக்கின்றன.

எல்லாள மன்னனின் நடுகல்லை உடைத்து, தமிழர்களின் நினைவுச் சின்னங்களை எல்லாம் அழித்து, சிங்கள எழுத்துகள், சின்னங்களைப் பொறித்து வருகிறான். தமிழர் ஆலயங்களுக்கு அருகே, பெளத்த விகாரைகளைக் கட்டுகிறான்.


இத்தகைய சிங்கள அரசுடன், கலாச்சார பரிவர்த்தனை ஒப்பந்தம் என்று சொல்லுவது, தமிழ் இனத்தை, தமிழர் நாகரிகத்தைப் புதைக்கும் சவக்குழி மீது, களியாட்டம் நடத்தவா?


மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, இந்திய-இலங்கைக் கடற்படைகளின் தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் போட்டதும், நம் கடல் எல்லையிலேயே கன்னிவெடிகளை வைப்பதற்கு இலங்கைக்கு ஒப்புதல் அளித்ததும், இந்திய இறையாண்மைக்குக் கேடு விளைவிக்கும் செயல் ஆகும்.


செஞ்சீனமும், பாகி
ஸ்தானும் இலங்கையில் கால் ஊன்ற விடாமல் தடுப்பதற்கு என்ற சொல்லிக்கொண்டே, இந்தியா இலங்கைக்கு பல்லாயிரம் கோடி உதவியும், இராணுவ உதவிகளும் செய்வது மிகவும் தவறான, முட்டாள்தனமான நடவடிக்கை ஆகும்.

இந்தியாவிடம் இருந்து எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டே, எதிர்காலத்தில், சீனமும், பாகிஸ்தானும், இலங்கையில் பலத்த அடித்தளம் அமைக்க, ஏற்பாடு செய்யப் போவது ராஜபக்சேதான்.


இந்தியாவின் பாதுகாப்புக்கும், பெரும் ஆபத்து, சிங்களர் பகுதியில் இருந்துதான் வரும். அப்படி ஒரு விபரீதம் நேரும்போது, நேரடிப் பாதிப்புக்கு இலக்காகப் போவது தமிழ்நாடுதான். கூடங்குளம் அணுமின் நிலையம், கல்பாக்கம் அணுமின் நிலையம், விஜயநாராயணம் கடற்படைத் தளம், திருச்சி துப்பாக்கித் தொழிற்கூடம், ஆவடி இராணுவ டாங்கிகள் வடிவமைப்புக் கூடம், இவையெல்லாம் எதிரிகளின் இலக்காகி விட்டால், அழிவு, தமிழனுக்கும், தமிழ்நாட்டுக்கும் அல்லவா?


இலங்கைத் தீவில் தமிழ் ஈழம் அமைவதும், ஈழத்தமிழர்கள் வலுப்பெறுவதும் மட்டும்தான் தாய்த் தமிழகத்துக்கு மட்டும் அல்ல, இந்தியாவுக்கே பாதுகாப்பு அரணாக அமையும்.


ஆனால், சோனியா காந்தியின் கைப்பிடியில் ஆடுகிற இந்திய அரசு, இதையெல்லாம் சிந்திக்காமல், தமிழ் இனத்தை அழிக்க, துரோகத்துக்கு மேல் துரோகத்தைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.


மாவீரர் பிரபாகரனின் தாய், பார்வதி அம்மையார் தமிழக மண்ணில் கால் எடுத்து வைக்கக்கூட அனுமதிக்காத இந்திய அரசு, தமிழ்நாட்டில் 1986 நவம்பர் 1 இல் ஒரு தலித் இளைஞன் திருநாவுக்கரசைச் சுட்டுக்கொன்ற கொலைக் குற்றவாளி டக்ளÞ தேவானந்தாவுக்கு, வரவேற்புக் கொடுப்பதும், அவனோடு பிரதமர் மன்மோகன் சிங் கைகுலுக்குவதும், தமிழர்களின் தன்மானத்துக்கு இந்திய அரசு விடுக்கின்ற சவால் ஆகும்.


கொலை செய்தது மட்டும் அல்ல, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, துப்பாக்கி முனையில் பத்து வயதுச் சிறுவனைக் கடத்திச் சென்று, பத்து இலட்சம் பணயத் தொகை கேட்ட கிரிமினல் குற்றவாளிதான் டக்ள
ஸ் தேவானந்தா. தமிழகத்தின் ஒரு தொழில் அதிபரை, துப்பாக்கி முனையில் மிரட்டிய டக்ளஸ் தேவானந்தாவிடம் இருந்து, ஏ கே 47 இரகத் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. தேச பாதுகாப்புச் சட்டத்தில் அடைபட்டுக் கிடந்த டக்ளசை, காங்கிரஸ் அரசுதான் விடுவித்து, இலங்கைக்கு அனுப்பி வைத்தது.


2006 ஜூன் இரண்டாம் வாரத்தில் தில்லிக்கு வந்த டக்ள
ஸ் தேவானந்தாவுக்கு, வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்ததும், தில்லியில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்தது குறித்து, ஜூன் 19 ஆம் தேதி, நான் பிரதமரைச் சந்தித்து, ஒரு கொலைக் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை, மத்திய அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சரே வரவேற்றதை எதிர்த்து புகார் செய்ததோடு, இதற்கு ஏற்பாடு செய்த இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீதும், விசாரணை நடத்த வேண்டும் என்று கோரினேன். ஆவன செய்கிறேன் என்ற பிரதமர், அதற்கு இரண்டு வாரங்கள் கழித்து, ஹவானாவுக்குச் சென்றபோது, ராஜபக்சேயோடு, டக்ளஸ் தேவானந்தாவையும், பிரதமர் கைகுலுக்கி வரவேற்றபோதுதான், இந்திய அரசின் நயவஞ்சகம் வெளிச்சத்துக்கு வந்தது.


இந்நிலையில், தமிழ் இனத்தையே அழிக்க முற்படும் சிங்கள அரசுடன், இந்திய அரசு செய்து கொண்டு இருப்பது ஒப்பந்தங்கள் அல்ல; தமிழ் ஈழத்தை எரிக்க முற்படும் தீப்பந்தங்கள். ஆனால் ஒன்று, மத்திய அரசுக்கு எச்சரிக்கை. இந்தத் துரோகம் தொடருமானால், இனி முத்துக்குமார்கள், தங்களை நெருப்பில் எரிக்க மாட்டார்கள். துரோகத்தின் கரங்க
ளை எரிக்க எதிர்காலத்தில், தீப்பந்தம் ஏந்துவார்கள் என எச்சரிக்கிறேன்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)