நடத்தை விதிமுறைகளை மீறிய ஆசிரியர்களை, தேர்தல் பணியில் இருந்து நீக்குக!
விவகாரங்கள்: சட்ட ஒழுங்கு, அரசியல்
மாவட்டம்: திருநெல்வேலி - மாநகர், தமிழ்நாடு
செய்தித்துறை: தொகுப்புகள்
நடத்தை விதிமுறைகளை மீறிய ஆசிரியர்களை,
தேர்தல் பணியில் இருந்து நீக்குக!
நிஜாம் கோரிக்கை
திருநெல்வேலி மாநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், தேர்தல் நடைமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனைத்துக்கட்சிக் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவரும், தேர்தல் அதிகாரியுமான திரு ஆர். பழனியாண்டி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் உரை ஆற்றிய நெல்லை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் கே.எம்.ஏ. நிஜாம், 22 மார்ச் 2009 ஆம் நாளிட்ட, தினகரன் நாளிதழின் நெல்லைப் பதிப்பில், வெளியாகி இருந்த விளம்பரத்தை, அவையில் சுட்டிக் காட்டினார்.
அந்த விளம்பரத்தில், திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர், தென்காசி ஒன்றியங்களில் உள்ள தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தைச் சேர்ந்த பதினோரு ஆசிரியர்கள், முதல் அமைச்சர் கருணாநிதியின் மகன் அழகிரிக்கு வரவேற்பு விளம்பரம் கொடுத்து உள்ளனர்.
அதில், பதினோரு ஆசிரியர்கள் தங்களது படத்தைப் போட்டு, ‘பொதிகை நோக்கி வரும் அகத்திய மாமுனியின் மறு உருவே’ என்று குறிப்பிட்டு உள்ளனர். திருநெல்வேலியில் நடைபெற்ற தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்துக்கு வருகை தந்த அழகிரியை, இவர்கள் ஏன் வரவேற்க வேண்டும்.
தேர்தல் அதிகாரிகளாகப் பணி ஆற்றுகின்ற அரசு சம்பளம் பெறுகின்ற ஆசிரியர்கள் இவ்வாறு விளம்பரம் கொடுத்து இருப்பது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகும். எனவே, இவர்களைத் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று நிஜாம் வேண்டுகோள் விடுத்தார்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், மறுமலர்ச்சி தி.மு.கழகம் போராட்டங்களை நடத்தும்; இந்தப் பிரச்சினையை, தலைமைத் தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா அவர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்வோம் என்றும் அவர் கூறினார்.
அவரது இந்தக் கருத்தை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரித்தன.
‘உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக’, மாவட்ட ஆட்சித் தலைவர் உறுதி அளித்தார். இதுகுறித்த செய்திகளை, இந்து ஆங்கில நாளிதழ் விரிவாக வெளியிட்டு உள்ளது.

