குமுதம் ரிப்போர்ட்டர் களங்கப்படுத்தலாமா? தி.மு.இராஜேந்திரன்

செய்தித்துறை: தொகுப்புகள்

Date: 
Sun, 22/03/2009

மதிப்பிற்குரிய குமுதம் ரிப்போர்ட்டர், பதிப்பாசிரியர் அவர்களுக்கு, வணக்கம். தங்களின் 19.03.2009 ஆம் நாளிட்ட வாரம் இருமுறை குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் 'சுவாமி வம்பானந்தா' பகுதியில் மறுமலர்ச்சி தி.மு.க. - வையும், தன்னலமற்ற தலைவர் வைகோ அவர்களையும் களங்கப்படுத்திச் செய்தி வெளியிட்டுள்ளீர்கள்.
மாணவப் பருவந்தொட்டு அண்ணா கண்ட இயக்கத்தில் பணியாற்றி, வைகோ அவர்கள் வெளியேற்றப்பட்டதன் மூலம் உழைக்கின்ற உண்மைத் தொண்டனுக்கு அங்கு இடம் இல்லை என்பதனை உணர்ந்து வைகோ தலைமை ஏற்று மனமகிழ்ச்சியுடன் பணியாற்றுகின்ற இலட்சத்திற்கும் மேற்பட்ட உணர்ச்சியுள்ள திராவிட இயக்கத் தொண்டர்களில் ஒருவன் என்கிறமுறையில், முற்றிலும் நடுநிலை தவறி எழுதப்பட்டுள்ள 'வம்பானந்தா' விமர்சனத்திற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன்.
திராவிட இயக்கத்தில் ஒரு குடும்ப ஏகாதிபத்தியத்தின் அழுத்தம் தாங்காமல் வைகோ வடிவில் காலம் உருவாக்கிய கட்சிதான்
மறுமலர்ச்சி தி.மு.க.

தமது மகனின் பட்டாபிசேகத்திற்குத் தடையாக இருக்கின்றானே என்று கொடிய கொலைப்பழி சுமத்தி வைகோவை வெளியேற்றிய அந்தநிமிடத்தில் தொடங்கிவிட்ட மறுமலர்ச்சி (இலட்சிய) போருக்கு தலைகொடுக்க முன்வந்த ஆயிரம் ஆயிரம் அடிமட்டத் தொண்டர்கள் எந்தப் பிரதிபலனும் பாராமல் நாட்டின் நாலாதிசைகளிலும் ஊடுருவி உயிர்த் துடிப்புடன் கடமையாற்றி வருகிறார்கள் என்பதை எங்கள் எதிரிகள்கூட மறுக்கமுடியாது.

புயல்வேகம் கொண்ட வைகோவின் அறிவிப்புகள் ஆணையாகவே ஏற்கப்பட்டு அந்த நொடியிலேயே செயல்வேகம் பெறுகிறது என்றால் 'இலட்சியதாகம்' கொண்ட அந்த அடிமட்டத் தொண்டர்களின் உன்னதமான தன்னலமற்ற உழைப்பே காரணமாகும்.

மறுமலர்ச்சி தி.மு.க.வில் இருந்து கடந்த 15 ஆண்டுகளில் விலகி ஓடிப்போனவர்களின் பட்டியலை வம்பானந்தாவும் அவர்களுக்குத் தகவல்தானம் தந்து அரிப்பைத் தீர்த்துக் கொள்கின்ற அற்பப் பதர்களும் புரட்டிப்பார்ப்பார்களேயானால், ஆட்சி, அதிகாரம், பதவி, பணம் என்ற நான்கு காரணிகளுக்குள் ஏதாவது ஒன்றுக்காகத்தான் இருக்கமுடியுமே தவிர கொள்கை மாறுபாட்டால் விலகிவிட்டதாகக் கருதமுடியாது என்பதை என்னால் அடித்துச் சொல்லமுடியும்.

இலாப - நட்டக் கணக்குப் பார்க்கின்ற வணிகத்தலமாக அரசியலைக் கருதுகிறவர்கள் தான் வருவார்கள், போவார்கள். அதில் பழையவர் - புதியவர் என்கிற பேதம் எதுவும் இல்லை. இவர்கள் இயக்கத்தால் தங்களுக்கு என்ன லாபம் என்ற கணக்கைப் போட்டுப் பார்ப்பார்களே தவிர தம்மால் இயக்கத்திற்கு என்ன லாபம் என்று எந்நாளும் நினைத்துச் செயல்பட்டு இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் கட்சியில் இருந்து போகிறார்களே தவிர வேறல்ல. இதனால் கட்சியில் தன்னல மனப்பாங்கு அகல்கிறது. கட்சி எழுச்சியும், புதுப்பொலிவும் பெறுகிறது. பாசிகள் அகற்றப்பட்ட தண்ணீர் தொட்டியாக தூய்மை பெறுகிறது. பயிர்களைக் கெடுக்கும் களைகள் அகற்றப்படுகின்றன. கட்சி எனும் பயிர் செழித்து வளர உதவுகின்றன. எனவே சுயநலம் கொண்டவர்களின் விலகல், கட்சியை வலிமைப்படுத்துமே அன்றி தளர்ச்சி அடையச் செய்துவிடாது என்பதே அசல் உண்மையாகும்.
சில விலகல்களால் கட்சி கலகலத்துப்போய்விடும் என்றோ காணாமல்போய் விடும் என்றோ சொல்வீர்களானால் இந்நாட்டில் காங்கிரசும், தி.மு.க.வும் ஏன் கம்யூனிÞட் கட்சிகளும் கூட பல காலத்திற்கு முன்னரே காணாமல் போய் இருக்கும் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

தகுதிகள் எல்லாம் இருந்தும்; தொண்டர்கள் ஒருசேர விரும்பியும் தம் காலடியில் வந்து விழுந்த அதிகாரப் பதவிக்கு ஆசைப்படாமல் தம்மோடு வந்தவர்களைப் பெருமைப்படுத்த தமது சகாக்களுக்கே பதவிகளைப் பெற்றுத்தந்த வைகோவைப் போன்ற ஒரு தலைவரை இந்திய நாடு இதுவரை சந்தித்ததில்லை என்பதை உணருமா குமுதம் ரிப்போர்ட்டர்?
பதினெட்டு மாதகாலம் காற்றாடி இல்லாத கொட்டடியில் தமிழ் இன உரிமைக்காக சிறையில் அடைக்கப்பட்டு உடல் 'நலிந்து' கிடந்தபோது, வைகோ அவர்களால் மத்திய மந்திரிகளாக ஆக்கப்பட்ட சொந்தக் கட்சியினர் தங்கள் குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து திரும்பியதைக்கூட மகிழ்ச்சியுடன் உள்வாங்கிக் கொண்ட வைகோவின் பெருந்தன்மைக்கும், ஜனநாயக மாண்பிற்கும் இணையான ஒரு சம்பவத்தை இந்தியாவில் எந்தக் கட்சியிலாவது அடையாளம் காட்டுமா குமுதம் ரிப்போர்ட்டர்?
இப்படிப்பட்ட தன்னலமில்லாத் தலைவர் வைகோவையும் குடும்ப அரசியல் விட்டு வைக்க வில்லை என்று எழுதியுள்ளீர்கள். இந்த வாசகங்களை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நெஞ்சு கொதிக்கிறது.

தாம் போட்டியிட்டால் 3 இலட்சம் ஓட்டுவித்தியாசத்தில் வெற்றிபெறலாம் என்று நாடு ஏங்கி எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகாசித் தொகுதியில் தாம் போட்டியிடவில்லை என்பது மாத்திரமல்ல. அந்த இடத்தில் தகுதிவாய்ந்த தமது உடன் பிறந்த தம்பி வை.இரவிச்சந்திரனை வேட்பாளராக அறிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கியிருக்கலாமே! உடல் ஊனமுற்று, உறுப்புகள் எல்லாம் செயல் இழந்த 50 க்கும் மேற்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை தமது வீட்டில் வைத்திருந்து மருத்துவ உதவிசெய்த "குற்றத்துக்காக" (?) கொடிய தடாச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்ட தியாகசீலர்தானே வை.இரவிச்சந்திரன்.
அதுமாத்திரமல்ல, வாலிபப் பெரியார் ஏவிபி ஆசைத்தம்பியைப்போல கைவிலங்கு பூட்டப்பட்டு அடக்குமுறைக்கு ஆளான கொள்கை ஏறு அவர். விளம்பர வெளிச்சமின்றி ஏழை - எளியோர் தம் துயரங்களுக்கு ஆறுதலாய் இன்றைக்கும் விளங்கிவரும் அந்த மக்கள் சேவகரை நிறுத்தி வெற்றி பெற வைத்தாரா வைகோ! எது குடும்ப அரசியல்?
தமிழகத்திலும் இந்தியாவிலும் பல தலைவர்கள், ஒழிக்கப்பட்ட மன்னர் ஆட்சியின் மறுவடிவங்களாக மாறி தகுதிகள் இல்லாத தங்கள் பிள்ளைகளை அரசியலுக்குள் திணிக்கின்ற "கலைஞர் நோய்" வெகுவேகமாகப் பரவி வருகிறது.

அப்படி திணிக்கப்பட்டுள்ள பல வாரிசுகளைக் காட்டிலும் செயல்திறத்திலும், அறிவாற்றலிலும், அஞ்சாது நெஞ்சு உயர்த்தும் போர்க்குணத்திலும் ஏன் தோற்றப் பொலிவிலும்கூட சிறந்து விளங்கும் தமது ஒரே மகன் துரைவையாபுரியை களத்தில் நிறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கிவிட்டாரா வைகோ! அப்படி ஆக்கியிருந்தால் கூட தகுதி திறமை அடிப்படையில் அதனை எவரும் மறுத்திட முடியுமா?

இவர்களைப் பதவிகளுக்கு முன் நிறுத்தவில்லை என்பது மாத்திரமல்ல தாம் பொதுச் செயலாளராகக் கடமையாற்றும் தாயகத்தில்கூட இவர்கள் தலை தென்பட்டதில்லை என்கிற அளவிற்கு குடும்பத்தையும், அரசியலையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாத தெளிந்த நீரோடைக்குப் பெயர்தான் வைகோ. கண்விழிக்காத குக்கிராமங்களில் உள்ள ஆயிரம் ஆயிரம் எளிய வீடுகளின் சுவர்களில் பொருத்தப்பட்டுள்ள காலண்டர்களில், பல ஏடுகளில், சிலநேரம் சில தொலைக்காட்சிகளில் எனத் தென்படுகின்ற என் தலைவர் வைகோவின் திரு உருவத்தைப் பார்த்தமாத்திரத்தில் இதோ அப்பா... இதோ மாமா; இதோ அண்ணாச்சி; இதோ அண்ணன்; இதோ தாத்தா என்று உள்ளத்தின் ஆழத்தில் இருந்து உறவுமுறை சொல்லி அழைக்கின்ற லட்சோபலட்சம் கழகக் குடும்பங்களின் கண்ணுக்குள் மணியாக விளங்கும் தலைவர்தான் வைகோ. அவர்கள்தான் வைகோவின் குடும்பம். அவர்களை நம்பித்தான் வைகோவின் பயணம். அந்தப் பாசப் பிறவிகளாம் கழகக் குடும்பங்களையும் உள்ளடக்கிய தமிழ் இனத்தின் உரிமை வாழ்வு ஒன்று தான் வைகோவின் இலட்சியம். இதில் எங்கே அய்யா வந்தது வைகோவின் குடும்ப அரசியல்.
நடுநிலை தவறாமலும்; நம்பகத்தன்மை சிதையாமலும் தமிழர் நிலத்தில் மதிக்கப்படுகின்ற குமுதம் குடும்பத்தின் மற்றொரு வரவான 'குமுதம் ரிப்போர்ட்டர்' வாரம் இருமுறை இதழ், தம் குடும்பப் பெயருக்கு களங்கமும்; அவமானமும் ஏற்படுகின்ற வகையில் 'வம்பானந்தா' வம்பளப்பது அதன் தரத்திற்கு ஏற்றதல்ல.
இதுபோன்ற செய்திகள் வெளிவர வேண்டுமென விரும்புகின்ற அக்கறை உள்ள சக்திகளின் அரிப்பைத் தீர்த்துக் கொள்கின்ற வடிகாலாக குமுதம் ரிப்போர்ட்டர் மாறிவிடக்கூடாது என்பது குமுதம் குடும்பத்து வாசகன் என்கிறமுறையில் எனது கவலை ஆகும்.

அயோக்கியர்களின் புகலிடமாகவும்; ஊழலின் உறைவிடமாகவும் தன்னலம் நாடுவோரின் சத்திரமாகவும் மாறிப்போய்விட்ட நமது நாட்டு அரசியலில் தியாகம், இனநலம், ஓய்வறியா உழைப்பு, உண்மை, நிலைகுலையா நேர்மை, ஒழுக்க நெறிகள் என இவற்றை மட்டுமே தம்மில் கொண்டு 45 ஆண்டுகாலமாக அறம் சார்ந்த அரசியலை நடத்திவரும் எங்கள் இலட்சியத் தலைவர் வைகோ அவர்களை புகழ்ந்து எழுதுங்கள் என்று உங்களை வலியுறுத்த மாட்டேன்.
ஆனால், உண்மைக்குமாறான விமர்சனங்களை எழுதி... எழுதி... அந்த நல்ல உள்ளத்தில் ஊமைக்காயங்களை ஏற்படுத்தி விடாதீர்கள் என தமிழின உணர்வால் வேண்டுகிறேன்.

குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் (19.3.2009)
அவதூறுச் செய்தியை மறுத்து அவ்விதழின் ஆசிரியருக்கு அனுப்பப்பட்ட கடிதம்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)