கேரளத்தின் புதிய அணை யோசனை வஞ்சகமானது: வைகோ
விவகாரங்கள்: பொருளாதாரம், விவசாயம்
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: சொற்பொழிவுகள்
கேரளத்தின் புதிய அணை யோசனை வஞ்சகமானது: வைகோ
தேனி, டிச. 25: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கேரள முதல்வர் அச்சுதானந்தன் புதிய அணை கட்டச் சொல்ளும் யோசனை வஞ்சகமானது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
முல்லைப் பெரியாறு அணை உரிமை பாதுகாப்பு கோரி மதுரையிலிருந்து டிச.18-ம் தேதி தொடங்கிய நடைபயணத்தை 6-வது நாளான சனிக்கிழமை இரவு கூடலூரில் நிறைவு செய்து பொதுக் கூட்டத்தில் அவர் பெசியது:
உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தி பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த, கடமை தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், புதிய அணை கட்ட வேண்டிய அவசியமில்லை, மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு செல்லத் தேவையில்லை, ஏற்கனவே கொடுத்த தீர்ப்பை அமல்படுத்தி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மேற்கொண்ட நடைப்பயணத்தின் நோக்கம் வெற்றியடைந்துள்ளது.
பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அதிமுக வழக்குத் தொடர்ந்து, நியாயமான வாதங்களை எடுத்துரைத்ததின் அடிப்படையில் 142 அடியாக உயர்த்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஆனால், கேரள முதல்வர் அச்சுதானந்தன் தில்லியில் முகாமிட்டு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து நீர்மட்டத்தை உயர்த்தினால் அணை உடைந்து விடும் என்று பொய்யான தகவல்களைத் தெரிவித்தார்.
இந்த பொய்யான பிரசாரத்தை தமிழக முதல்வர் கருணாநிதி தில்லி சென்று பிரதமரைச் சந்தித்து உண்மை நிலையை விளக்கி சொல்ல தவறியதன் விளைவே பெச்சுவார்த்தைக்கு பிரதமர் பரிந்துரை செய்தது.
கேரள அரசு பெரியாறு அணை குறித்து பொய்யான தகவல்களை தமிழ் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தது, இதை மறுத்து தமிழக அரசு மலையாள பத்திரிகைகளில் ஏன் விளம்பரம் செய்யவில்லை.
அணை உடையும் என்றால் உறவுகள் உடையும். பொய்யைச் சொல்லி உரிமையைப் பறிக்க கேரளம் முயற்சிக்கிறது. ஆனால் தமிழக மக்களுக்கு சட்டப்படி உரிமை உள்ளது.
பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி கடமை தவறி விட்டார். இது தமிழ்நாட்டிற்கு செய்த துரோகம்.

