விவசாயமும் தொழிலும் பாதிக்கப்படாமல் இருக்க, சாயக் கழிவுநீரை அரசே சுத்திகரிக்க வேண்டும்! நாடாளுமன்றத்தில் அ.கணேசமூர்த்தி
விவகாரங்கள்: பொருளாதாரம், சுற்றுச்சூழல், தேசிய
மாவட்டம்: ஈரோடு, தமிழ்நாடு
செய்தித்துறை: சொற்பொழிவுகள்
விவசாயமும் தொழிலும் பாதிக்கப்படாமல் இருக்க,
சாயக் கழிவுநீரை அரசே சுத்திகரிக்க வேண்டும்!
நாடாளுமன்றத்தில் அ.கணேசமூர்த்தி
சாயக் கழிவு நீரை அரசே சுத்திகரிப்பு செய்து விவசாயத்தையும், தொழிலையும் காப்பாற்ற வேண்டுமென 27-04-2010 அன்று நாடாளுமன்றத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. (ஈரோடு தொகுதி) உறுப்பினர் அ.கணேசமூர்த்தி கோரிக்கை விடுத்து உள்ளார்.
விவரம் வருமாறு:
“தமிழ் நாட்டில் ஈரோடு மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் மட்டும், சுமார் 650 துணி மற்றும் நூல் சாயத் தொழிற் சாலைகள் இருப்பதாக மாசு கட்டுப் பாட்டு வாரியம் கணக்கெடுத்து உள்ளது. கணக்கெடுப்பில் சேராத சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய சாயப்பட்டறைகள் இயங்குகின்றன. தினசரி சுமார் 50 லட்சம் மீட்டர் துணி சலவை செய்யப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.2,000 கோடி அளவிற்கு ஏற்றுமதிக்கு வேண்டிய துணிகள் பதப்படுத்தப்படுகிறது. ஈரோடு மற்றும் சுற்றுப்பகுதிகளில் மட்டும் சுமார் நாளொன்றுக்கு 9 கோடி லிட்டர் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இச்சாயத் தொழிற்சாலைகள் காவேரி, பவானி ஆறு மற்றும் காளியங்கராயன் வாய்க்கால் கரையோரங்களில் அமைந்துள்ளதால் வெளியேறும் கழிவு நீர் காவேரி, பவானி ஆறுகளிலும் காளியங்கராயன் வாய்க்காலிலும் கலந்து, ஈரோடு, பவானி பகுதிகளில் ஒட்டு மொத்த விவசாய பாசன நீரும், குடி தண்ணீரும் பாழ்பட்டுப் போய் உள்ளது.
அதேபோல், திருப்பூர் பகுதி சாயக் கழிவுகளாலும், பெருந்துறை சிப்காட் பகுதி தொழிற் சாலைகளின் சுத்திகரிக்கப் படாத கழிவுகளாலும், பெருந்துறை, சென்னிமலை பகுதி விவசாயமும், குடிதண்ணீர் திட்டங்களும் சீர்கெட்டுப் போயுள்ளது.
சாயக்கழிவு நீரை சுத்திகரிக்க தேவை யில்லாத கட்டுப்பாட்டை விதிப்பதால் துணி பதப்படுத்தும் தொழில்களும், அதன் மூலம் துணி ஏற்றுமதியும் பெரிதும் பாதிக்கும் நிலை உருவாகும். சாயக் கழிவு நீரை சரியாக கையாளாவிட்டால் விவசாயமும் குடிதண்ணீர் மற்றும் சுற்றுச் சூழலும் பாதிக்கப்படும். எனவே, விவசாயமும், தொழிலும் பாதிக்கப் படாமல் இருக்க, சாயக் கழிவு நீரிலுள்ள நச்சுத் தன்மையை உரிய முறையில் பாக்டீரியாக்கள் மூலம் நீக்கி, தண்ணீரை ஆபத்தில்லாத பகுதிக்கு அப்புறப்படுத்த அரசின் செலவிலேயே உரிய திட்டத்தினை நடைமுறைப்படுத்திட வேண்டும். அதன் மூலம், அழிவின் விளிம்பிலுள்ள விவசாயத்தையும், துணி நூல் பதனிடும் தொழிலையும், அதில் பணியாற்றும் தொழிலாளர் குடும்பங் களையும் காப்பாற்ற உடன் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என இந்த அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.
அ.கணேசமூர்த்தி எம்.பி., இவ்வாறு உரையாற்றினார்.

