ஸ்டெர்லைட் ஆலையை மூட, உயர்நீதிமன்றம் உத்தரவு வைகோ தொடுத்த வழக்கில் தீர்ப்பு; வைகோ வரவேற்பு!
விவகாரங்கள்: பொருளாதாரம், சுற்றுச்சூழல், மருத்துவம், தேசிய
மாவட்டம்: தூத்துக்குடி, தமிழ்நாடு
செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்
ஸ்டெர்லைட் ஆலையை மூட, உயர்நீதிமன்றம் உத்தரவு
வைகோ தொடுத்த வழக்கில் தீர்ப்பு;
வைகோ வரவேற்பு!
தூத்துக்குடி நகரிலும், சுற்று வட்டாரங்களிலும் நாசம் விளைவித்துக் கொண்டு இருந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்று, 15 ஆண்டுகளாக, மறுமலர்ச்சி தி.மு.கழகம் போராடி வந்தது. தொடர் போராட்டங்கள் பலவற்றில் கைது செய்யப்பட்டோம். உலகின் பல நாடுகளில், இப்படிப்பட்ட ஆலைகள் மூடப்பட்டு விட்டன. மராட்டிய மாநிலத்தில், ஆலையை அமைக்க அனுமதிக்காமல் அந்த அரசு விரட்டியபிறகு, தமிழ்நாட்டுக்கு இந்த ஆலை வந்தது.விவசாயிகள், மீனவர்கள், அந்தப் பகுதியில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும், பெருங்கேடு விளைவித்து வந்தது இந்த ஸ்டெர்லைட் ஆலை.
விளைநிலங்கள் பாழாகும்; கடல்வாழ் உயிர் இனங்கள் அழியும்; மக்களின் உடல்நலத்துக்குப் பெருங்கேடு நேரும் என்பதால், இந்த ஆலை மூடப்பட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்து நானே வாதாடினேன்.
துளியும் சமரசத்துக்கு இடம் இன்றி, ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நாங்கள் போராடி வந்தோம். இந்த ஆலையை மூட வேண்டும் என்று தேர்தல் பிரகடனத்திலும் தெரிவித்தோம். இப்போது, உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
உண்மை ஒருநாள் வெல்லும்; நீதி நிலைக்கும் என்பதற்கு உதாரணமாகி விட்டது.
எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ, அவர்கள் அநீதியை எதிர்த்துப் போராடி வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை, இந்தத் தீர்ப்பு வழங்கி உள்ளது.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
28.09.2010 .,

