இராம நதி மேல்மட்டக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்! வைகோ வலியுறுத்தல்
விவகாரங்கள்: பொருளாதாரம், விவசாயம், புறநகர்
மாவட்டம்: திருநெல்வேலி - புறநகர், தமிழ்நாடு
செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்
இராம நதி மேல்மட்டக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்!
வைகோ வலியுறுத்தல்
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், கடையம் பகுதியில் இராம நதி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. அதற்கு அடுத்த கணவாயில் கடையம் பெரும்பத்து கிராமத்தில் ஜம்பு நதி உற்பத்தியாகிறது. ஜம்பு நதியில் அமைந்துள்ள மூன்று அணைக்கட்டுகள் மூலம் 599.80 ஏக்கர் நிலம் பாசன வசதிக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.
இராம நதியில் சுமார் 147.50 மில்லியன் கன அடி நீர் உபரியாக உள்ளது. ஆனால், ஜம்பு நதியில் கிடைக்கும் நீர் அதன் முதல் அணைக்கட்டான குத்தாலப்பேரி அணைக்கட்டுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. எனவே, இராம நதி நீர்த் தேக்கத்தின் உபரி நீரை ஜம்பு நதியின் இரண்டாவது அணைக்கட்டான நாரணப்பேரி அணைக்கட்டுக்குப் புதிய கால்வாய் மூலம் கொண்டு செல்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தைச் செயல்படுத்த 4.15 கி.மீ. நீளத்திற்குப் புதிய கால்வாயில் 62 மில்லியன் கன அடி நீரைக் கொண்டு அதன் கீழ் உள்ள 4 கண்மாய்களுக்கும் மீதமுள்ள நீரைக் கொண்டு கடைசி கண்மாயான பத்மநாபபேரி குளத்துக்கும், அங்கிருந்து 2.75 கி.மீ. நீளத்திற்குப் புதிய கால்வாய் அமைத்து வறட்சியாக உள்ள புங்கன்குளம், மடத்தூர் வடக்கு குளம், மடத்தூர் தெற்கு குளம் மற்றும் பண்டாரக்குளம் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியக் குளங்களுக்கும் வழங்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, பிரேரணைகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. உத்தேச திட்ட மதிப்பீடு 2009-2010 விலை விகிதப்படி ரூ. 659 இலட்சம் மட்டுமே.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதால் எப்பகுதிக்கும் பாதிப்பு இல்லை. உபரி நீரை முழுமையாகப் பயன்படுத்தி வறட்சிப் பகுதிகளுக்கு உதவும் வாய்ப்பு உருவாகும். இதன்மூலம் 189.60.0 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன் 81.14.5 ஹெக்டேர் பாசன நிலங்களின் இடைவெளி நிரப்பப்படுகிறது.
மொத்தம் 289.18.0 ஹெக்டேர் நிலங்கள் பயன் அடைகின்றன. இதன்மூலம் ஆவுடையானூர், திப்பணம்பட்டி, புங்கம்பட்டி, மடத்தூர் மற்றும் தெற்கு மடத்தூர் பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரம் மக்கள் பயனடைவர்.
மிக நீண்டகாலமாக இப்பகுதி மக்களாலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தாலும் வலியுறுத்தப்பட்டு வரும் இத்திட்டத்திற்கு கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது; தொடர்ந்து வந்த தி.மு.க. அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பொது மக்கள் நலன் கருதி இராம நதி மேல்மட்டக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை-8
03.09.2010

