ஒபிசி 27 விழுக்காடு இடஒதுக்கீடு; தலைவர் வைகோ அவர்களின் சட்டப் போராட்டமும், பங்களிப்பும்..!
ஒபிசி 27 விழுக்காடு இடஒதுக்கீடு; தலைவர் வைகோ அவர்களின் சட்டப் போராட்டமும், பங்களிப்பும்..!
முதுநிலை மருத்துவப் படிப்புகளில், அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்கும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று, கடந்த 07.01.2022 வெள்ளிக்கிழமை அன்று, உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.
இதன்மூலம், இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 4000 மாணவர்கள் மருத்துவக் கல்வியில் ஆண்டுதோறும் தங்களுக்கான உரிமையைப் பெறுவார்கள்.
தமிழ்நாட்டில், தி.மு.க , ம.தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இடையறாது நடத்திய சட்டப் போராட்டத்தின் விளைவாக, சமூகநீதி மீண்டும் நிலைநாட்டப்பட்டு இருக்கின்றது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு பெற்றுத் தந்ததில் தலைவர் வைகோ அவர்களுக்கும் மிகப் பெரிய பங்கு இருக்கின்றது. அதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
இது தொடர்பாக, தலைவர் வைகோ அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒரு பகுதி:
மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இந்திய ஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 விழுக்காடு இடங்கள் தரப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, இடஒதுக்கீடு தரக்கோரி தலைவர் வைகோ அவர்கள் 12.06.2020 அன்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
(W.P. No: 8335/2020)
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில், தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டுச் சட்டங்களே பின்பற்றப்பட வேண்டும் என்றும் அந்த வழக்கில் தெரிவித்து இருந்தார்.
உச்சநீதிமன்றத்தில் தலைவர் வைகோ அவர்கள் இது தொடர்பாக ஏற்கனவே வழக்கு தொடுத்திருந்த நிலையில், 11.06.2020 அன்று உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும்,
13.05.2020, 28.05.2020, 11.06.2020, 14.10.2020, 15.10.2020, 26.10.2020 ஆகிய தேதிகளில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை தர மறுத்த ஒன்றிய பா.ஜ.க அரசையும், அன்றைய மாநில அரசான அ.தி.மு.க அரசையும் கண்டித்து தலைவர் வைகோ அவர்கள் விரிவான அறிக்கைகளை வெளியிட்டு இருந்தார்.
மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கு, தலைவர் வைகோ அவர்களும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் தொடர்ந்து போராடி வந்ததை, இந்த நேரத்தில் நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
மறுமலர்ச்சி தி.மு.கழகத் தோழர்கள் இப்பிரச்சனையில், தலைவர் வைகோ அவர்கள் மேற்கொண்ட சட்டப் போராட்டத்தையும், பங்களிப்பையும் அனைவரின் கவனத்திற்கும் கொண்டுச் செல்ல வேண்டும் என, அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
துரை வைகோ
தலைமைக் கழகச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
11.01.2022